Crime: பிறவிக்குறைபாட்டால் அவதிப்பட்ட 4 வயது குழந்தை.. கொடூரமாக கொலை செய்த தாய்.. நடந்தது என்ன?
நேற்று முன்தினம் தனது மைத்துனரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரம்யா இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பிறவி குறைபாட்டால் அவதிப்பட்ட 4 வயது குழந்தையை பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிக்கலசந்திரா என்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ரம்யா என்ற மனைவியும், 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேஷ், ரம்யா தம்பதியினர் இருவரும் கணினி பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் வெங்கடேஷ் நார்வே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ரம்யா பெங்களூருவில் பணியாற்றிய நிலையில் குழந்தைகளை வளர்ப்பதற்காக சமீபத்தில் வேலையை விட்டு நின்றுள்ளார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் தனது மைத்துனரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரம்யா இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ந்த வெங்கடேஷ் சகோதரர் உடனடியாக சுப்பிரமணியபுரா போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு வெங்கடேஷ் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது 4 வயது குழந்தை பிரதிகா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றியதுடன் ரம்யாவையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெங்கடேஷ்,ரம்யா தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் இருவரும் முதலில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் வளர வளர ஒரு குழந்தை மட்டும் நல்ல ஆரோக்கியமாக இருந்துள்ளது. மற்றொரு குழந்தை வாய் பேச முடியாமலும், மனநல பாதிக்கப்பட்டும் இருந்துள்ளது. குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகுந்த சிரமப்பட்டு மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் கனத்த இதயத்துடன் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து கழுத்தை நெரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரம்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

