TN Budget 2025: இந்த பட்ஜெட்டில் எங்களுக்கு ஒன்னுமே இல்ல... கொதிக்கும் தேனி மக்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு பதிலாக தன்னிறைவு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் - தேனி மக்கள்
தமிழ்நாட்டின் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தேனி மாவட்ட மக்கள் பல்வேறு நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டாக இது அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேனி மாவட்ட மக்கள் காத்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் வர்த்தகர்களுக்கான பட்ஜெட்டாக இருக்க வேண்டுமென தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு பதிலாக தன்னிறைவு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னனென்ன?
2025-26ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட் குறித்து வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகளாக, வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2ம் இடத்திலும் உள்ளது. 3ம் இடத்தில் குஜராத் இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
2023-24 கணக்கின்படி தொழில் துறை உற்பத்தி மதிப்பு ரூ.29.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்துக்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.3,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னேறி உள்ளதால் இந்தாண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் வர்த்தகர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் காப்பீடு தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வர்த்தகர்களின் பங்கு முக்கியமாக இருப்பதால், வர்த்தகரின் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
GST வரி விதிப்பு தொடர்பாக முழு புரிதல் வர்த்தகர்கள் இடையே இல்லாமல் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் இதர வரிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு தனிக்குழு அமைக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியுடன் GST குறித்த முழு தகவல் மற்றும் வரி விதிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய மென்பொருள் உருவாக்க அரசு முன் வர வேண்டும். ஜிஎஸ்டி சட்டங்களை எளிய முறையில் கொண்டுவர வேண்டும்.
தொடர் விலைவாசி உயர்வால் தங்கம் விற்பனை தொழில் முடங்கி உள்ளது . மெட்ரோ சிட்டியில் மட்டும் தொழில் நடத்தி வந்த பெரிய நிறுவனங்கள் தற்போது 2ம் கட்ட நகரங்களிலும் தங்களது கிளைகளை விரிவுபடுத்தி உள்ளன. இதனால் உள்ளூர் அளவில் சிறு நகை விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனத்துடன் சிறு வியாபாரி போட்டி போட்டு அவர்களுக்கு நிகரான வரி கட்டுவது சாத்தியமில்லாதது. எனவே, முழுமையாக வர்த்தகர்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டை அரசு அறிவிக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேபோல, சிறு வியாபாரிகளுக்கான பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என்று தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்தது தற்போது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு நறுமண பொருட்களை தரம் மற்றும் உற்பத்தி திறனை பயன்படுத்தி சந்தைப்படுத்திடவும் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தேனி, நாமக்கல், ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு 50 கோடி ரூபாயில் பொது வசதி மையம் மற்றும் இதர வசதிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பானது நறுமணப் பொருட்களை அதிக அளவு ஏற்றுமதி செய்யும் அண்டை மாநிலமான கேரளா உள்ள நிலையில் இதனால் தேனி மக்களுக்கு எந்த பயனும் அளிக்காத என இப்பகுதி விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.





















