குட்டி யானைக்குப் போட்டியா வந்த Tata Intra EV! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ மைலேஜா? விலை எவ்ளோ?
டாடா நிறுவனம் மின்சார பிக்கப் வாகனமான Tata Intra EV- யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் பிரபலமான கார் உள்பட வாகன தயாரிப்பு நிறுவனம் டாடா. கார் வாகன தயாரிப்பு மட்டுமின்றி, சரக்கு வாகனங்கள் தயாரிப்பிலும் டாடா மிகவும் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, விற்பனையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற டாடாவின் சரக்கு வாகனம் டாடா ஏஸ்.
Tata Intra EV:
தற்போது இந்த tata ace-க்கு போட்டியாக டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சரக்கு வாகனம் Tata Intra EV. இந்த Tata Intra EV 10 அடி நீளம் கொண்டது. இதில் அதிகபட்சமாக 1.75 டன் கிலோ வரை பொருட்களை ஏற்றிச் செல்லலாம். அதாவது, 1750 கிலோ வரை பொருட்களை ஏற்றிச் செல்லலாம். சிலிண்டர்,பால் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சார சாதனங்கள் என பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த Tata Intra EV உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மைலேஜ் எப்படி?
97 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் இழுதிறன் கொண்ட Tata Intra EV சரக்கு வாகனத்தில் 28.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த Tata Intra EV பிக்கப் வாகனத்தை 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 55 நிமிடங்கள் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 211 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
விலை என்ன?
இதில் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. கேபின் சிறந்த வசதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த Tata Intra EV சாலையில் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக கணிக்கும் ட்ராக்கர் வசதியும் உள்ளது. இந்த எலக்ட்ரிக் பிக்கப் வாகனத்தில் எலக்ட்ரானிக் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதன் விலை ரூபாய் 11.95 லட்சம் ஆகும்.
6 வருடம் அல்லது 2 லட்சம் கிலோமீட்டருக்கு வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் இருப்பதால் சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும்போது சார்ஜ் செய்து கொள்வதும் எளிதாக இருக்கும். அதேபோல, இதன் டேஷ்போர்டில் பேட்டரி எவ்வளவு மீதம் உள்ளது? என்பதும் துல்லியமாக காட்டப்படும்.
உள்ளூர் சவாரிக்கு உகந்தது:
200 கிலோமீட்டருக்குள் சவாரி செல்வது அல்லது ஊரின் உள்ளேயே தொடர்ச்சியாக ஓட்டும் சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு இந்த Tata Intra EV மிகவும் உகந்ததாக இருக்கும். அதேசமயம் நெடுந்தூர தொலைவிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது மிகவும் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று கருதப்படுகிறது. மதுரை முதல் சென்னை வரை நெடுந்தூர தொலைவிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சூழல் வந்தால் இடைவெளியில் ஆங்காங்கே நிறுத்தி சார்ஜ் போட்டுச் செல்லும் சூழல் உண்டாகும். சார்ஜிங் மையம் இல்லாவிட்டால் பெரும் சிக்கல் உண்டாகும்.























