![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தூத்துக்குடியை சோகத்தில் ஆழ்த்திய டிசம்பர் மழை : முண்டு வத்தல் விளைச்சல் நிலை! விவசாயிகள் வேதனை!
Thoothukudi Rains : டிசம்பர் 17-க்கு பின்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை.. முண்டு வத்தல் போதிய விளைச்சல் இல்லை என்பதால் விவசாயிகள் வேதனை.
![தூத்துக்குடியை சோகத்தில் ஆழ்த்திய டிசம்பர் மழை : முண்டு வத்தல் விளைச்சல் நிலை! விவசாயிகள் வேதனை! Thoothukudi Tamilnadu December rains in Thoothukudi district Red Chilli Chillies Inadequate crop yield Farmers worried TNN தூத்துக்குடியை சோகத்தில் ஆழ்த்திய டிசம்பர் மழை : முண்டு வத்தல் விளைச்சல் நிலை! விவசாயிகள் வேதனை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/4fe4cd1b104d4552333873d3d9f724cb1713748080142571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Thoothukudi December Rains : தூத்துக்குடி மாவட்டத்தில் முண்டு வத்தல் போதிய விளைச்சல் இல்லை என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்கா, கம்பு, வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்த மல்லி போன்றவை விதைத்தனர். இங்கு பெரும்பாலும், மானாவாரி விவசாய நிலங்களாகும், கடந்த டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை பெய்து பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இயற்கை இடர்ப்பாட்டால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர்.
பருத்தி மற்றும் மிளகாய் பழம் மகசூல் காலம் ஆறு மாதமாகும். மேட்டு பகுதி நிலங்களில் முளைத்த பயிர்கள் தற்போது பருத்தி மற்றும் மிளகாய் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எட்டையபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், புதூர் பகுதி கரிசல் நிலங்களில் விளையக்கூடிய முண்டு மிளகாய் வத்தலுக்கு சந்தையில் அதிக மவுசு காணப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முண்டு மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு இருபத்து எட்டாயிரம் ரூபாய் வரை விலை போனது. முண்டு மிளகாய் பழம் அறுவடை செய்யப்பட்டு களத்து மேட்டில் விவசாயிகள் காய வைத்துள்ளனர். பத்து நாட்களுக்கு ஒரு முறை பழம் பறிக்கப்படுகிறது. சராசரியாக நான்கு முறை பறிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு முதல் பறிப்பில் மட்டுமே மிளகாய் பழம் திரட்சியாக காணப்பட்டது.
அடுத்தடுத்த பறிப்பு நடுத்தரமாகவும், சுமாராகவும் உள்ளது. இந்நிலையில் காய வைக்கப்பட்டுள்ள மிளகாய் பழம் தரம் பிரிக்கப்படுகிறது. ஆற்று மணலில் காய வைக்கப்படும் பழம் காய்ச்சலாகவும், நிறமாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தூறல் மழைக்கு மிளகாய் பழம் காம்பு பகுதியில் வண்டு துளைத்து குவிண்டாலுக்கு இருபது கிலோ வரை வத்தல் சோடை ஏற்படுகிறது. ஏற்கனவே ஏக்கருக்கு நான்கு குவிண்டால் வரை கிடைத்த வத்தல் இந்தாண்டு ஏக்கருக்கு அதிக பட்சமாக ஒன்னரை குவிண்டால் மட்டுமே கிடைத்துள்ளது. வத்தல் பருவட்டு குவிண்டால் ரூபாய் பதினேழாயிரம் வரையிலும் நடுத்தரம் பதினைந்தாயிரம் வரை விலை போகிறது.
ஏக்கருக்கு உழவு, களை, மருந்து, பறிப்பு கூலி என நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து, அதன் மகசூல் வருவாய் அதை விட மிகவும் குறைவாக கிடைத்துள்ளது.
இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, ”டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகசூல் நஷ்டத்தை ஈடுகட்ட டிசம்பர் 17-க்கு பின்னர் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)