மல்லிகைப்பூ சாகுபடியில் அசத்தல் வருமானம் பெறும் தஞ்சாவூர் வக்கீல்
ஆரம்பத்தில் நெல்தான் சாகுபடி செய்து வந்தனர். பிறகு சிறிய அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்தனர். நானும் எனது அண்ணனும் நெல் சாகுபடியில் போதிய லாபம் கிடைக்காததால் மல்லிகை பூ சாகுபடியில் இறங்கி விட்டோம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் மல்லிகை பூக்கள் சாகுபடியை மேற்கொண்டு சிறப்பான வருமானத்தை பெற்று வருகின்றனர் சங்கர் (44), சதீஷ் (40) என்ற அண்ணன், தம்பி ஆகியோர். இவர்களை சந்தித்தோம். அப்போது மல்லிகைப்பூ சாகுபடியில் கிடைக்கும், நன்மைகள், சிரமங்கள் பற்றி சதீஷ் கூறியதாவது:
நான் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். இருந்தாலும் என் தாத்தா, அப்பாவிற்கு அடுத்தப்படியாக எங்களுக்கு முக்கியமான தொழில் என்றால் விவசாயம்தான். ஆரம்பத்தில் நெல்தான் சாகுபடி செய்து வந்தனர். பிறகு சிறிய அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்தனர். பின்னர் நானும் எனது அண்ணனும் நெல் சாகுபடியில் போதிய லாபம் கிடைக்காததால் முழுமையாக மல்லிகை பூ சாகுபடியில் இறங்கி விட்டோம். ஆரம்பத்தில் சிறிய அளவில் செய்து கொண்டு இருந்ததை முழுமையாக செய்ய ஆரம்பித்தோம்.

மல்லிகை பூ சாகுபடியை பொறுத்தவரை அது குறித்து நன்கு தெரிந்து இருந்தால்தான் லாபம் பெற முடியும். சரியான முறையில் பராமரிக்க தெரிந்து இருக்க வேண்டும். இல்லாவிடில் களை மண்டிப்போய் அறுவடை குறைந்து விடும். ஏற்கனவே அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை வைத்து நாங்கள் இருவரும் இயற்கை முறையிலேயே மல்லிகை பூ சாகுபடி செய்ய முடிவு செய்து ஒன்றரை ஏக்கரிலும் இப்போது மல்லிகை பூ சாகுபடிதான் செய்து வருகிறோம். முதலில் வயலை 4 முறை நன்று உழுது மாட்டுச்சாணம், காய வைத்து பொடியாக்கிய ஆட்டுச்சாணம் ஆகியவற்றை தெளித்து வயலை உழுது தயார்படுத்தினோம்.
பின்னர் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து வாங்கி வந்த மல்லிகை நாற்றுகளை ஒரு வயலில் 5க்கு 5 என்ற இடைவெளியில் நட்டோம். மற்றொரு வயலில் 4க்கு 4 என்ற இடைவெளியில் நட்டோம். பதியன் குச்சிகளை ஆடி மாதம் நடவு செய்வது மல்லிகைக்கு சிறந்தது. ஒன்றுக்கு ஒன்றரை அடி ஆழம் குழி வெட்டி ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். நடவு செய்யும் போது செடியை சுற்றிலும் சிறிது மண் அணைத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர்பிடிப்பு நன்றாக இருக்கும்.
இயற்கை உரம் தெளித்து வயலை உழுததால் அதற்கு மேல் எவ்வித இயற்கை உரமும் இட தேவையில்லை. மணக்கும் மல்லிகை பூ வருமானத்தையும் மணக்க செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நடவு செய்த 15 நாட்களில் வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பிக்கும். நடவு செய்த 30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும், முதல் ஒரு வருடத்திற்கு செடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை அறுவடை செய்ய முடியும். முதல் வருடத்தில் எவ்வித சாகுபடியும் செய்யவில்லை. மாதம் ஒருமுறை களை பறித்தல், தேவையாக இருந்தால் மட்டும் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை மேற்கொண்டோம்.

சூரிய ஒளி நன்கு இருந்தால் சாகுபடியும் அதிகரிக்கும். முதல் ஆறு மாதத்திலேயே செடிகள் நன்கு வளர்ந்து விடும். ஆரம்பத்தில் 3 கிலோ மட்டுமே அறுவடை செய்தோம். தினமும் அதிகாலையில் 3 மணிக்கு ஆரம்பித்தால் 5 மணிக்குள் அறுவடையை முடித்து விட்டு தஞ்சையில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விடுவோம். ஒரு வருடம் முடிந்த பின்னர் தினமும் 8 கிலோ முதல் 10 கிலோ வரை அறுவடை செய்தோம். மல்லிகை செடிகளை அதிகம் தாக்குவது செம்பேன் மற்றும் மொட்டு துளைப்பான்தான்.
கற்பூர கரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்து வந்தால் எந்தவித பூச்சி தாக்குதலும் இருக்காது. இரண்டாவது வருடம் முதல் பூக்கள் பூத்து முடிந்த உடனே கவாத்து செய்து செடிகள் அதிக உயரம் வளராமல் தடுக்கலாம். இதனால் அதிக துளிர்கள் தோன்றும். மேற்சொன்ன இயற்கை சாகுபடி முறையை பின்பற்றினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம். மகசூலும் அதிகமாக இருக்கும்.
கட்டாயமாக மாதம் ஒரு முறை களை எடுத்து விட வேண்டும். தஞ்சை மண்ணை பொறுத்தவரை நெல், கரும்பு, சோளம், தானிய வகைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகை சாகுபடியை ஒரு சிலர்தான் செய்து வருகின்றனர். சரியான முறையில் செய்தால் மண் எப்போதும் நம்மை ஏமாற்றாது. வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். மல்லிகை பூக்கள் ஏப்ரல் மாதத்தில் அதிகம் பூக்கும்.
அப்போது தினமும் 15 முதல் 20 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். அனைத்து மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை பூக்கள் அதிகம் பூக்கும். மார்கழி மாதத்தில் பூக்கள் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் செடிகளை தரையிலிருந்து ஓர் அடி உயரம் மட்டும் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால், புதுத் தளிர்கள் முளைத்து ஒன்றரை மாதங்களில் மீண்டும் பூவெடுக்கும்.
ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினமும் சராசரியா எனக்கு 8 முதல் 12 கிலோ பூ கிடைக்கும். அந்த வகையில சராசரி விலையாக வைத்துக் கொண்டால் களை பறிப்பு, பூ பறிக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் என்று செலவுகள் போக மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.
சோலார் பேனல் மற்றும் பம்ப் செட் வைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம், நல்ல காற்றோட்ட வசதி மல்லிகை செடிகளுக்கு தேவை, செடி அதிகம் அடர்த்தியாகவிட்டால் நோய் தாக்கம் வந்து விடும். அதனால் அவ்வபோது கவாத்து செய்ய வேண்டும். தண்ணீர் பாய்ச்சுவது ஆரம்பத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் வேண்டும். அதற்கு பின்னர் தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. ஒரு வருடத்திற்கு பின்னர் அதிகம் இயற்கை உரம் தெளிப்பது கிடையாது. தேவைப்படும் போது, பூச்சி தாக்குதல் இருந்தால் மட்டும் மாட்டுச்சாணத்தை தண்ணீருடன் கலந்து பாய்ச்சுவோம். வேறு எவ்வித உரத் தேவையும் தேவையில்லை. இயற்கை முறையில் சாகுபடி என்பதால் அதிகம் செலவும் இல்லை.
அறுவடையை பொறுத்தவரை தினமும் அதிகாலையில் ஆரம்பித்தால் சில மணிநேரத்தில் முடித்து விடுவோம். நவம்பர் மாதத்தில் பூக்கள் அதிகம் இருக்காது. ஆனால் எங்கள் தோட்டத்தில் தினமும் 2 முதல் 3 கிலோ வரை பூக்கள் பறித்து வருகிறோம். உள்ளூரிலேயே வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகிறோம். சீசன் காலத்தில் தினமும் 10 கிலோவில் இருந்து 15 கிலோ அதற்கு மேல் கிடைக்கும். விசேஷ காலங்களில் மல்லிகை பூக்களுக்கு கிலோவிற்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை கிடைக்கும். மற்ற நாட்களில் கிலோ ரூ. 50 முதல் ரூ.200 வரை கிடைக்கும். எப்படி பார்த்தாலும் சராசரியாக மாதத்திற்கு ஆட்கள் சம்பளம், களை எடுத்தல், பராமரிப்பு செலவுகள் போக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லாபம் எடுத்து விடலாம்.
அதிகாலையில் வந்து நானும் எனது அண்ணன் சங்கர் மற்றும் அம்மா முனியம்மாளும் சேர்ந்தே பூக்களை பறிப்போம். இது எங்கள் குடும்பத் தொழில் என்று கூறுவதுதான் சரியானது. நல்ல வருமானம் கிடைக்கும் என்பதில் சரியானது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.























