மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் இன்று (01.07.2026) தொடங்கியது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் மாபெரும் முகாம்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், இந்த 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி (FMD) முகாம்கள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி (10.08.2026) வரை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
இன்றைய தொடக்க முகாமில் மட்டும், மூவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசிகள் வெற்றிகரமாகப் போடப்பட்டன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயியும் பயன்பெறும் வகையில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட உள்ளன.
6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்
முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இந்த நோயின் வீரியம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்துப் விளக்கினார்.
"கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) என்பது பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளைத் தாக்கும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுவதுடன், அவற்றின் குளம்புகள் மற்றும் வாய் பகுதிகளில் கடுமையான புண்கள் தோன்றும். இதனால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ள முடியாமல் தவித்து, பால் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிடும். சில நேரங்களில் மாடு மற்றும் எருமைகளில் திடீர் இறப்புகளும் நேரிடலாம்."
மேலும், "இந்நோய் காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை தப்பாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே சிறந்த வழிமுறை" என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஒரு லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு
விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்தச் சுற்றின் கீழ் சுமார் 1 இலட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் தேவையான தரமான மருந்துப் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் தடையின்றிக் கிடைக்கப் பெறும்படி கால்நடை மருந்துவமனைகளிலும், கிடங்குகளிலும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, விடுபடாமல் அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய வழிமுறைகள்
கால்நடை வளர்ப்போர் இந்த முகாமிற்குத் தங்கள் கால்நடைகளை அழைத்து வரும்போது சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆவணங்கள்: முகாமிற்கு வரும்போது தங்களின் அடையாள அட்டை மற்றும் அலைபேசியைக் (Mobile Phone) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.
பதிவு முறை மற்றும் OTP: தடுப்பூசிப் பணிகளை உடனுக்குடன் ஆன்லைனில் (Online Portal) பதிவு செய்ய ஏதுவாக, கால்நடை வளர்ப்போரின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்திட வேண்டும்.
காது வில்லைகள் (Ear Tagging): தடுப்பூசி போடப்படும் அனைத்துக் கால்நடைகளுக்கும் அடையாளக் காது வில்லைகள் பொருத்தப்படும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை வளர்ப்போரும் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த முகாமிலேயே தடுப்பூசி போட்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாது உப்புக்கலவை விநியோகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
தொடக்க விழாவைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திய விவசாயிகளுக்கு, கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தாது உப்புக்கலவைகளை (Mineral Mixture) மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இலவசமாக வழங்கினார்.
இந்த முக்கிய நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் அன்பரசன், உள்ளூர் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் துறை அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Before You Go
Chicken Fertilizer : இறந்த கோழிகளை என்ன செய்வது ? மாத்தி யோசித்த விவசாயி… கொழிக்கும் வளங்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















