கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
வருவாய்த் துறை, ரயில்வே அதிகாரிகள் இணைந்து கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

கரூரில் ரயில்வே கட்டுமானப் பணியால் விவசாய நிலத்திற்கான நீர்வழி பாதிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.
பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜெயகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்...," தனது விவசாய நிலம் வழியாக தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால் நிலத்திற்குச் செல்லும் நிரந்தர அணுகுமுறை பாதையும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கு முன் உரிய கூட்டு அளவீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதி உத்தரவில், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து (இன்று) ஜூலை 10-ஆம் தேதி கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ரயில்வே நிர்வாகம் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஆய்வுக்கு மனுதாரருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும், ஆய்வு நடைபெற்றதை கையொப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும், மனுதாரருக்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதையும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வழக்கை முடித்து வைத்தார். இதனையடுத்து, இடைக்கால மனுவையும் நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















