ஜூலை 31 கடைசி தேதி! விவசாயிகளே உடனே பண்ணிடுங்க! மிஸ் பண்ணாதீங்க, வருத்தப்படுவீங்க!
Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY): பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

"பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் நெல் (சொர்ணவாரி) பயிருக்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்."
சொர்ணவாரி பருவம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் காரீப் (சொர்ணவாரி) பருவத்தில் நெல் I, 380 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726/- பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன ?
பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
தங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.
விவசாயப் பயிர் காப்பீடு முக்கியத்துவம் என்ன?
விவசாயப் பயிர் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு ஒரு மிக முக்கிய திட்டமாக இருந்து வருகிறது. எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், வறட்சி, புயல், அத்துடன் பூச்சித் தாக்குதல்கள் மற்றும் நோய்கள் போன்ற காரணங்களால் பயிர் இழப்பு ஏற்படும் போது, இக்காப்பீடு விவசாயிகளுக்கு ஏற்படும் பெரும் நிதி இழப்பை ஈடுசெய்து, விவசாயிகளின் பாதுகாக்கின்றன.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து எளிதாக கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது என்பது அத்தியாவசியம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.




















