போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
"வெல்க தமிழ் ஈழம்" என்ற முழக்கத்தோடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற வன்னி அரசு இன்று, விசிக-வின் 36 வருட அரசியல் பயணத்தில் முதல் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று மாநில சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த அயன்ரெட்டியார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியரசு. இவரது தந்தை ஒரு கம்யூனிசவாதி.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது சிறுவயதிலேயே பல்வேறு சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டார்.
மேலும், சிறுவயது முதலே அம்பேத்கர் மற்றும் பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தார்.
தமிழ் ஈழத்தின் மிகுந்த ஈடுபடுகொண்ட வன்னியரசு, விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழீழதுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, தமிழீழம் ஒன்றே அம்மக்களின் விடுதலைக்குத் தீர்வு என இன்றும் முழங்கும் இவர், இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி பகுதியை தனது அடையாளமாக்கி, ஜெயராஜ் என்ற தனது இயற்பெயரை வன்னியரசு என்று மாற்றிக்கொண்டார்.
வெறும் பெயரோடு நிற்காமல், இலங்கைக்கு நேரில் சென்று, தமிழ் மக்கள் மீதான போர் கொடுமைகளை கண்டு பல முறை ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
போர் உச்சத்தில் இருந்த இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த மக்களையும் சந்தித்தார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் இவருக்கு நல்ல நட்பும் இருந்தது.
இதன் காரணமாகவே இவர் வெளிநாடு செல்லவும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அதேவேளையில், விசிக-வின் வளர்ச்சியிலும் வன்னியரசுவின் பங்கு மிகப்பெரியது.
திருமாவளவனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்து வருகிறார்.
கட்சியில் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் சிறுத்தையாகப் போராடிய வன்னியரசுக்கு, கட்சியில் அவரின் உழைப்பு அங்கீகாரமாக 2021-ல் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியில் களமிறக்கப்பட்டார்.
அந்தத் தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வென்றபோதும், அந்த வெற்றியை விட வன்னியரசுவின் தோல்வி திருமாவளவனைப் பாதித்தது.
அதனாலேயே, இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டது.
திண்டிவனத்தில் போட்டியிட்ட வன்னியரசு சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கும்போது, "தந்தை பெரியார் வாழ்க, புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க" என தனது கொள்கைத் தலைவர்களின் பெயர்களை உச்சரித்த வன்னியரசு, அங்கிருந்த மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாளாக "வெல்க தமிழ் ஈழம்" என்று முழங்கினார்.
தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்ற விசிக-வின் சுமார் 30 வருட முழக்கமும் நிறைவேறியிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இன்று சமூகநீதித்துறை அமைச்சாராகப் பொறுப்பேற்றிருக்கும் வன்னியரசுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்




















