300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு
விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்களை கொத்து கொத்தாக இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி வரும் நிலையில், சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு பதவிகளை ராஜினாமா செய்ய சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கிளம்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சித் தலைமை உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை இபிஎஸ் நீக்கினார்.
மேலும், பசுபதி என்பவரை அந்தப் பொறுப்பில் நியமித்தார். பின்னர், சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த பலரை இபிஎஸ் ஏற்றுக்கொண்ட போதும், அவர்களுக்கான கட்சிப் பதவிகள் மீண்டும் அவரவர்க்கு வழங்கப்படவில்லை.
இதனால், விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும், சி.வி சண்முகம் தரப்பினருக்கும் அடிக்கடி கடுமையான மோதல் ஏற்பட்டன.
இவ்வாறிருக்க விழுப்புரம் அதிமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கடந்த வாரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இ.பி.எஸ் நீக்கினார்.
இந்த நிலையில், சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களின் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்யமுடிவு, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளனர்.
கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்று சி.வி சண்முகம் வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும், விலகுவதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















