எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களும், இபிஎஸ் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சியில் அவரின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியை இபிஎஸ் பறித்தார்.
இவரின் கட்சிப் பதவி மட்டுமால்லாமல், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏ-க்களின் கட்சிப் பதவிகளையும் இபிஎஸ் பறித்தார். அதேவேளையில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக பசுபதி என்பவரை இபிஎஸ் நியமித்தார்.
பின்னர், அந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஏற்றுக்கொண்ட இபிஎஸ், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கட்சிப் பதவிகளை வழங்கினார். அதில், சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
இவ்வாறிருக்க, கடந்த வாரம் திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் அதிமுக நகர செயல்வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில் கலந்துகொள்ள சி.வி.சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் தரப்பு ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், கூட்டத்துக்கு செல்ல முயன்ற சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களை, மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் உள்ளே விடாமல் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு அவர் வருகை தந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மோதலைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், மீண்டும் இத்தகைய மோதல் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















