Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
நாட்டின் எல்லையைக் காக்கும் ராணுவப் பணியில் சேர இளைஞர் ஒருவர் தேர்வாகியும், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் அவரது ராணுவக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளிம்புநிலை இளைஞனின் வீரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவர் இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சொல்லும் குடுகுடுப்பு அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தாஸ், பள்ளிப் படிப்பை முடித்த கையோடு எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடி வந்துள்ளார்.
அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த பலனாக, சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான எழுத்துத் தேர்வுகளில் தாஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து, ராணுவத்தில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Certificate Verification) ஜூன் 5-ஆம் தேதியே நேரில் வர வேண்டும் என அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதமும் வந்திருந்தது.
ஓராண்டு அலைக்கழிப்பு:
ராணுவப் பணிக்கு ஜாதி சான்றிதழ் இன்றியமையாதது என்பதால், தாஸ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரி வருவாய்த்துறையிடம் மனு அளித்திருந்தார். ஆனால், அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு கடந்த ஓராண்டாக அவரை அலைக்கழித்து வந்துள்ளனர். அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் தாஸ் சமர்ப்பித்த போதிலும், அவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆவணச் சரிபார்ப்புக்கான இறுதித் தேதி நெருங்கிய சூழலிலும் சான்றிதழ் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தாஸ், தனது தாய் மற்றும் தந்தையுடன் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலக வளாகத்திற்கு விரைந்தார்.
அலுவலகத்தில் திடீர் தர்ணா:
வேறு வழியின்றி, தங்களுக்கு நீதி வழங்கக் கோரி அலுவலகத் தரையில் அமர்ந்து மூன்று பேரும் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரை உடனடியாக அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான கோப்புகளை அவசரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர்.
"எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி..."
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசிய தாஸின் தந்தை மாரி, "நாங்கள் நாடோடிகளாக ஊர் ஊராகச் சென்று குடுகுடுப்பு அடித்து பிழைப்பு நடத்துபவர்கள். அதனால் எங்களிடம் பூர்வீக ஜாதி சான்றிதழ் எதுவும் இல்லை. எங்கள் குடும்பத்திலேயே என் மகன் தான் முதன்முதலாகப் படித்து இந்த நிலைக்கு வந்துள்ளான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவனது எதிர்காலமே பாழாகிவிடும்" என்று கதறினார்.
வறுமையிலும் சாதித்துக் காட்டிய விளிம்புநிலை இளைஞன் ஒருவன், ஒரு சான்றிதழுக்காக அதிகாரிகளின் வாசலில் கண்ணீருடன் காத்திருக்கும் இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















