"வக்கற்ற தவெக அரசே.. சாத்தானின் ஆட்சியா நடக்குது" MLA கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
லண்டனிலிருந்து சென்னை திரும்பியிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக MLA மார்க்கண்டேயன் கைதைக் கண்டித்து, "தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" என்று காட்டமாகக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் தரக்குறைவாகவும், மிரட்டல் விடுத்தும் பேசினார்.
இதனால், தவெக-வினர் மார்க்கண்டேயன் மீது புகாரளித்தனர். அதனடிப்படையில் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, உடனடியாக, மார்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய கையோடு, மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், "ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences." என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















