Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அம்மா உணவகத்திலிருந்து ஹோட்டல்களுக்கு இட்லி விற்கப்படுவதாக பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சி அலுவலகத்தின் அருகே அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் முதியவர்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் உணவருந்தி வருகின்றனர்.
மேலும், இங்கு நாள்தோறும் காலையில் 1200 இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன. காலை 7 மணிக்கு விற்பனை தொடங்கும் நிலையில், உணவக ஊழியர்கள் அடுத்த அரை மணி நேரத்திலேயே அங்கு சாப்பிட வருபவர்களிடம் இட்லி இல்லை என்று கூறி திருப்பியனுப்பி விடுகின்றனர்.
ஆனால், உன்மையில் அப்பகுதியில் சிறு சிறு ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு 60 முதல் 80 இட்லி என மொத்த மொத்தமாக விற்பதாகவும், அந்த ஒரு ஒரு ரூபாய் இட்லியை ஹோட்டல்காரர்கள் 10 ரூபாய்க்கு விற்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுவாகவே அம்மா உணவகத்தில் பார்சல் வழங்கக் கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. அதையும் மீறி பார்சல் வழங்கப்படுவது மட்டுமின்றி மொத்த மொத்தமாக ஹோட்டல்களுக்கு இட்லி விற்கப்படுவதால் அங்கு சாப்பிட வரக்கூடியவர்களுக்கு இட்லி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊழியர்களோ, அதிகாரிகள் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று சிலர் கூறுகின்றனர்.
இதனால், நகராட்சி அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து, தவறு செய்யும் அம்மா உணவக ஊழியர்கள், தவறுக்கு உடந்தையாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















