TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளாததன் பின்னணியில் தவெக காங்கிரஸ் இடையே இருக்கும் மனக்கசப்பு தான் காரணம் என பேச்சு அடிபடுகிறது. விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிலேயே ராகுல்காந்திக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என கடுப்பானதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏக்களின் ஆதரவை நாடி இருந்தபோது, முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டியது காங்கிரஸ். அதுவும் பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்த நிலையில், அந்த கூட்டணியை உடைத்துவிட்டு த.வெ.க-விற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதன்பின்னர், முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவிற்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.
சென்னை வந்த அவர், தனியார் ஹோட்டலில் தங்கி, விழாவிற்கு கிளம்ப ஆயத்தமானபோதுதான் தெரிந்தது. ராகுல் காந்திக்கு விழா மேடையில் சீட் போடவில்லை என்பது. விஜய்க்கு ஆதரவாக டெல்லியில் இருந்து கிளம்பிவந்திருக்கும் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என தொடக்கத்திலேயே ராகுல்காந்தி கோபப்பட்டதாக சொல்கின்றனர். உடனடியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் த.வெ.க நிர்வாகிகளை அழைத்து கடுமையான குரலில் சொன்னபின்னரே, விழா மேடையில் விஜய்க்கு அருகில் ராகுல்காந்திக்கு சீட் கொடுக்கப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது.
அதோடு, தேசிய அளவில் முக்கியத் தலைவரான ராகுலிடம், அமைச்சராக பதவியேற்ற சீனியரான செங்கோட்டையன் உட்பட யாருமே அவரிடம் குறைந்தப்பட்சம் கைக்கொடுத்துக் கூட வாழ்த்து பெறவில்லை. இது ராகுலை மட்டுமின்றி, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, வி.ஐ.பி வரிசையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கென முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. விழாவிற்கு வந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர், உடனடியாக கிடைத்த இருக்கையில் சென்று விழா மேடைக்குக் கீழே அமர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அமரக் கூட சீட் கிடைக்கவில்லை. அவர்களை அழைத்து, இருக்கையை ஒதுக்கீடு செய்து அமர வைக்கக் கூட த.வெ.க தரப்பில் யாரும் முன்வரவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கடுப்பானதாக சொல்கின்றனர்.
விழா முடிந்ததும் ராகுல்காந்தி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரிடம் கடுமையாக பேசியிருக்கிறார். தனக்கான சரியான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகளுடன் பேசி ஏற்பாடு செய்யக் கூட தெரியாது என்று அவர் கோபித்துக்கொண்டதாகவும், அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு சென்ற ராகுல்காந்திக்கு உரிய ஏற்பாடுகளை முறையாக செய்யாததும் அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டுச் சென்றிருக்கிறது.
அதன்பின்னர் டெல்லி கிளம்பிச் சென்ற ராகுல்காந்தியை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அங்கு சென்று சந்தித்துள்ளனர். அப்போது. திமுக ஆட்சியில் இருந்ததுபோல த.வெ.க. ஆட்சியில் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் நம்முடைய தனிப்பட்ட கொள்கைகளிலும் அடையாளங்களிலும் இனி சமரசம் செய்துகொள்ள கூடாது எனவும் திட்டவட்டமாக ராகுல் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், த.வெ.க ஆட்சிக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதும், அதிமுக தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்ததும் ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை. அதோடு, முதன்முதலாக த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாகவும் இதுவரையில் முதல்வர் விஜய் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் ராகுல்காந்தியை அப்செட் ஆக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வி.டி.சுதீசன் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு முதலமைச்சர் விஜய் செல்லவில்லை. இப்போது கேரளா சென்றால், அங்கு ராகுல்காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசும்போது, அதிமுக ஆதரவு தொடர்பான விஷயங்களும், அமைச்சரவை குறித்தும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாலேயே முதல்வர் விஜய், தன்னுடைய கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை முதலில் சந்திப்பதே அரசியல் மரபாக இருக்கும் நிலையில், அதற்காகவும் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்





















