"ஏமாற்றத்தில் தமிழ்நாடு?" கொதிக்கும் ஸ்டாலின் வரவேற்கும் EPS, Nirmala
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம் பெறவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
2026-27 நிதிநிலையாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருந்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், ``விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ இரயில், ஜல் ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய இரயில்வே திட்டங்கள், ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதிப் பகிர்வு" ஆகியவற்றை பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக ட்வீட் போட்டார். ஆனால், ஸ்டாலின் கேட்ட எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டுக்கென்று, 2 அதிவேக ரயில் வழித்தடங்கள், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம். பொதிகை மலையில் ட்ரெக்கிங் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம். அரியவகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம். பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள்" ஆகியவை பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்டிருந்தன. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது திருக்குறளை வாசிக்கும் நிர்மலா சீதாராமன், இம்முறையும் திருக்குறளையும் வாசிக்கவில்லை.
இவ்வாறிருக்க, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ``நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும். சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவற்றால் தமிழ்நாடு பயன்பெறும்" என்று வரவேற்றிருக்கிறார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட் வழக்கத்தை விட பெரும் ஏமாற்றம் என்று விமர்சித்திருக்கிறார்.























