புலம்பிய திமுக நிர்வாகிகள்! உடனே ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்! அமைச்சர்களிடம் கறார்
திமுக ஆட்சியில் இருக்கும் போது கூட கட்சிக்காரங்களுக்கு எதுவுமே கிடைக்கல என நிர்வாகிகள் சிலர் புலம்பியதால், திமுக மீட்டிங்கிலேயே வைத்து அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் அதிரடி ஆர்டர் ஒன்றை போட்டு கறார் காட்டியுள்ளார் ஸ்டாலின்.
2026 தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன. மாவட்ட வாரியாக இருக்கும் சிக்கல்களுக்கு முடிவு கட்டி கட்சியினரை தேர்தல் பணிகளில் ஆக்டிவ்வாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த வகையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட போது, கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இருக்கும் ஒரு அதிருப்தியை கவனத்துக்கு கொண்டு வந்தார் ஸ்டாலின். அதாவது திமுக ஆட்சியில் இருக்கும் போது கூட கட்சிக்காரர்களுக்கு எந்த பதவியோ, வேலைவாய்ப்போ கிடைப்பதில்லை என்ற குறை இருப்பதாக தெரிகிறது. கட்சிக்காக உழைக்கும் எங்களையும் கவனத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று புலம்பி வந்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் காதுகளுக்கும் சென்றுள்ளது.
அதனால் திமுக கூட்டத்தில் அமைச்சர்களையும் மாவட்ட செயலாளர்களையும் வைத்தே நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கியுள்ளார் ஸ்டாலின். ரேஷன் கடைகள், அங்கன்வாடிகளில் உள்ள இடங்களை ஏன் இன்னும் நிரப்பவில்லை, கட்சிக்காரர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கலாமே என கேட்டுள்ளார். காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்களை தேர்வு செய்து ஏற்கனவே லிஸ்ட் கொடுத்து விட்டோம் என மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களை பார்த்து கை காட்டியுள்ளனர்.
அப்போது, ஒவ்வொரு பணிக்கும் நிறைய பேரின் பெயர்களை மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைத்துள்ளதால் அதனால் யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருப்பதாக அமைச்சர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பக்கம் திருப்பி விட்டுள்ளனர். அப்போது மீட்டிங்கிலேயே வைத்து 2 தரப்பினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை பார்த்து உடனடியாக லிஸ்ட் தயார் செய்து காலியிடங்களை நிரப்ப வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியுள்ளார் ஸ்டாலின். கட்சிக்காரர்கள் அதிருப்தியில் இருந்தால் தேர்தல் வேலைகள் எப்படி நடக்கும், நம்முடைய கட்சிக்காரர்களுக்கே எதுவும் கிடைக்கவில்லை என்றால் எப்படி என்று சீனியர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடனடியாக அந்த வேலையை முடித்துவிடுகிறோம் என அமைச்சர்கள் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















