"எனக்கு எதுக்கு இத்தனை?" கான்வாயை cut செய்த மோடி! பின்னணியில் மெகா பிளான்
’’ரூல்ஸ் நமக்கு மட்டும்தானா இவரு ஃபாலோ பண்ணமாட்டாரா’’ என கேட்கும் நெட்டிசன்ஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துள்ளார் பிரதமர் மோடி.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி சில வேண்டுகோள்களை வெளியிட்டார்.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.முடிந்தவரை மெட்ரோ இரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட 'work from home' முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பயணத்துக்கான எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தலாம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை (Foreign Exchange) பாதுகாப்பதற்காக, ஒரு வருடத்திற்கு ஆபரணத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது (Destination Weddings) போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
அதிகப்படியாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்களான கான்வாயின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைத்து மாற்றத்தை தன்னிடம் இருந்து அமல்படுத்தத் தொடங்கியுள்ளார் மோடி.
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு என்பது உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக பிரதமரின் கான்வாயில் ஜாமர் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்கும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாகக் குறைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
வாகன எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல், கான்வாயில் மின்சார வாகனங்களை (EV) அதிக அளவில் பயன்படுத்தவும் SPG-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்காகப் புதிய வாகனங்களை வாங்காமல் ஏற்கனவே உள்ள வளங்களைக் கொண்டே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் இந்தச் சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் தங்கள் கான்வாய் வாகனங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். எனினும் பாதுகாப்பு விதிமுறைகளான 'புளூ புக்' விதிகளில் சமரசம் செய்யாமல் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு நிர்வாகத்தில் ஆடம்பரத்தைக் குறைத்து, இக்கட்டான சூழலில் தேசத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பிரதமரின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகப் பொருளாதாரம் சவாலான நிலையில் இருக்கும்போது, நாட்டின் முதல் குடிமகனான பிரதமர் முன்னின்று மேற்கொள்ளும் இத்தகைய மாற்றங்கள் சாமானிய மக்களிடையே ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















