Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
`அதெப்படி அம்பேத்கர் பெயரைத் தவிர்க்கலாம். என்னை சஸ்பெண்ட் செஞ்சாலும் பரவால்ல, அமைச்சர் தன்னோட தப்ப ஒத்துக்கணும்'. மகாராஷ்டிராவில் குடியரசு தின நிகழ்ச்சியில் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த அமைச்சருக்கெதிராக பெண் போலீஸ் கோபமகாப் பேசும் வீடியோ வைரல்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான வரைவு குழுவால் உருவாக்கப்பட்ட `அரசியலமைப்புச் சட்டம்' 1950 ஜனவரி 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளே ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
அதில், மகாராஷ்டிராவில் நாசிக் போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வைச் சேர்ந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜன் தனது உரையின்போது, அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடாமல் வேறு சிலரின் குறிப்பிட்டார்.
அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ், குடியரசு தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரைக் கூறும் அமைச்சர் ஏன் அம்பேத்கர் பெயரைக் கூறவில்லை என அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதால் உடனடியாக பிற போலீஸ் அதிகாரிகள் மாதவி ஜாதவை அமைதிப்படுத்தி அவரை அங்கிருந்து நகர்த்தினர்.
இந்த நிலையில், மாதவி ஜாதவ் அமைச்சரின் செயல் குறித்து தனது சக அதிகாரிகளிடம் கோபமாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அவீடியோவில் மாதவி ஜாதவ், ``அரசியலமைப்பை உருவாக்கியவரையே அவர்கள் நீக்க முயல்கிறார்கள். ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் சம்பந்தமில்லாதவர்களின் பெயர்கள் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டார். ஆனால், அரசியலமைப்பை உருவாக்கியவரை ஏன் குறிப்பிடவில்லை. அம்பேத்கர் பெயரை அமைச்சர் குறிப்பிடாதது மிகப்பெரிய தவறு. தன்னுடைய தவறை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். என்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை. ஆனால், அம்பேத்கரின் அடையாளத்தை அழிக்க விடமாட்டேன்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கமளித்தார். அப்போது, `` `பாரத் மாதா கி ஜே, 'வந்தே மாதரம்', 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜே' போன்ற முழக்கங்களை நான் முழங்கினேன். அம்பேத்கரின் பெயரை வேண்டுமென்றே நான் தவிர்க்கவில்லை. இது தற்செயலாக நடந்திருக்கலாம். இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சர் தெரிவித்தார்.























