Muslim Pray in Temple | இதுதான் சார் தமிழ்நாடு! அம்மனுக்கு சாற்றிய மாலையை இஸ்லாமியருக்கு மரியாதை செய்த அர்ச்சகர் | Madurai | Tamil News
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பள்ளிவாசல் முன்பாக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள், இனிப்புகள் வழங்கிய நிலையில் பள்ளிவாசல் நிர்வாகிக்கு மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது கவனம் பெற்றுள்ளது. மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றதாக இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகின்றனர்.
இந்நிலையில் சுவாமியும் அம்மனும் தெற்குவாசல் பகுதியில் வீதி உலா வந்தபோது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கு, குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். அப்போது வீதி உலாவின் போது பள்ளிவாசல் முன்பாக மீனாட்சிசுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை பள்ளிவாசல் நிர்வாகிக்கு மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தெற்குவாசல் பகுதி பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்த இஸ்லாமியர்கள் வீதியின் இருபுறங்களிலும் நின்றபடி தங்கபல்லக்கில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியும் நேரில் பார்த்து ரசித்தனர். சாமி வேடமிட்டபடி வந்த குழந்தைகள் சிறுவர்களுககு அங்கு நின்றுகொண்டிருந்த இஸ்லாமிய சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வீதி உலா முன்பாக வந்து அவர்களுக்கு கைகொடுத்து வரவேற்றார். சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு குளிரபானங்கள் வழங்கியது குறித்து பள்ளிவாசல் நிர்வாகி கூறும்போது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.





















