தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமன விவகாரத்தில், மாநில அரசின் 3 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலுக்கு UPSC ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம் புதிய டிஜிபி-க்கான நியமன அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கடந்த திமுக ஆட்சியில் கடைசி 7 மாதங்களாக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவில் முழு நேர டிஜிபி நியமிக்கப்படாமல் இருந்தது.
பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் செயல்பட்டுவந்த நிலையில், கடந்த ஏப்ரலில் சட்டமன்றத் தேர்தலையொட்டி சந்தீப் ராய் ராத்தோரை முழுநேர டிஜிபி-யாக தேர்தல் ஆணையம் நியமித்தது.
இவ்வாறிருக்க, தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் முக்கிய துறைகளில் உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவில் புதிய டிஜிபி-யை நியமிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது மாநில அரசு.
நியமன அதிகாரம் மாநில அரசிடம் இருந்தாலும், அதற்கான பரிந்துரைப் பட்டியலுக்கு மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒப்புதல் அளித்த பிறகுதான், புதிய டிஜிபி-ஐ தமிழக அரசு நியமிக்க முடியும்.
இந்த நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லி UPSC அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, 3 பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்பட்டியலில், தற்போது டிஜிபி-யாக இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்தப் பரிந்துரைப் பட்டியலுக்கு UPSC ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதன்மூலம் கூடிய விரைவில் இந்த 3 பேரில் ஒருவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















