3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி
சட்டமன்றத்தில் தவெக-வுக்கு ஆதாரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ-க்களில் 3 பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற தவெக, காங்கிரஸின் கூட்டணி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் IUML ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
பின்னர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதனால், எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு தவெக அமைச்சர் பதவிகளை தரப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டது.
மறுபக்கம், எடப்பாடி பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்.
பின்னர், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இது நடந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை நேரில் சந்தித்தார்.
மறுபக்கம், ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ-க்களும் ஆதவ் ஆர்ஜூனாவை நேரில் சந்தித்து தவெக-வில் இணைந்தனர்.
ஏற்கெனவே, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் இ.பி.எஸ் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது 3 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்திருப்பதால், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்களின் பலம் 17-ஆக குறைந்திருக்கிறது.
இதனால், அதிமுக-வில் இ.பி.எஸ்ஸின் கை ஓங்கியிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















