BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
மேற்கு வங்கத்தில் மம்தாவின் 15 வருட ஆட்சிக்கு முடிவுக்கட்டி முதல்முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக தற்போது, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போல திரிணாமுல் காங்கிரஸையும் இரண்டாக உடைக்கும் "ஆபரேஷன் லோட்டஸ்" வேளையில் இறங்கியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியிருக்கிறது.
1970-களில் தனது கல்லூரி பருவத்திலேயே காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியற்றிய மம்தா பானர்ஜி, 1998-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை நிறுவினார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட 13-ஏ ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவுகட்டி 2011-ல் முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது.
அதுவரையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்த மம்தா, மாநிலத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்த அடுத்த கணமே மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அன்று முதல் கடந்த மே மாதம் வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் மம்தா மட்டுமே அங்கு முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.
ஆனால் தற்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 2021-ல் மம்தா களமிறங்கிய தொகுதியில் அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக, திரிணாமுல் காங்கிரஸின் 15 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.
ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் மற்றும் ஆதரவாளர்கள் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற சம்பவங்கள் மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி, தேர்தலில் மம்தாவின் தோல்விக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூட, தேர்தலுக்கு முன்பு கலவரத்தில் உயிரிழந்த தனது சொந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற மம்தா மருமகனும், எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜிக்கு உள்ளூர் மக்கள் தர்ம அடி கொடுத்து வெளியேற்றினர்.
ஆனால், பாஜக தான் இவ்வாறு மக்களைத் தூண்டிவிட்டதாக மம்தா குற்றம் சட்டி வருகிறார்.
இன்னொருபக்கம், தற்போது கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் மம்தாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர்.
சமீபத்தில் மம்தா ஏற்பாடு செய்த கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், கட்சியிலுள்ள 80 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 60 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. இறுதியில் அந்தக் கூட்டத்தையே மம்தா ரத்து செய்தார்.
மேலும், கொல்கத்தாவில் மம்தா நடத்திய போராட்டத்தில் வெறும் 8 எம்.எல்.ஏக்களும், 29 எம்.பி-க்களில் வெறும் 6 எம்.பி-க்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுபோதாதென்று, சுமார் 50 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.
இது சட்டமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம்.
எனவே இவர்கள் விலகினால், கட்சியும் சின்னமும் மம்தாவை விட்டுப் போகும்.
மகாராஷ்டிராவில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவில், ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பாஜக கூட்டணி சேர்ந்து முதலமைச்சரானார். அதோடு கட்சியையும், சின்னத்தையும் உத்தவ் தாக்கரேவிடமிருந்து பறித்தார்.
அஜித் பவாரும் அதேபோலவே தேசியவாத காங்கிரஸை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதலமைச்சராகி, சரத் பவாரிடமிருந்து கட்சியையும், சின்னத்தையும் தன்வசப்படுத்தினர்.
அதேநிலை நிலை தற்போது தனக்கும் நேர்ந்துவிடுமோ என்று மம்தாவும் தற்போது அச்சத்துக்குள்ளாகியிருக்கிறார்.
அதனால்தான் மம்தா பானர்ஜி, "பாஜக எங்கள் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது. கட்சியில் சிலரை பணம் கொடுத்தும், சிலரை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மிரட்டியும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது" என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இதுமட்டும் நிகழ்ந்தால், பாஜக-வின் ஆபரேஷன் லோட்டஸுக்கு பலியான கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸும் இடம்பெறும். இதனால் தற்போது மேற்கு வங்க அரசியலே பரபரப்பில் இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















