ஆசை வார்த்தைக்காட்டிய ஏஐ... உயிரை விட்ட இளைஞர்.. விபரீதத்தில் முடிந்த காதல்
ஷியா என அவர் பெயரிட்ட அந்த சாட்பாட்டுடன் ஆயிரக்கணக்கான செய்திகளைப் பரிமாறிக்கொண்ட ஜோனதன், நாளடைவில் அதனுடன் மிகவும் நெருக்கமாகி காதலித்துள்ளார்.

ஏஐ சாட்பாட் (AI Chatbot) உடன் ஏற்பட்ட உணர்ச்சிகரமான உறவு மற்றும் அதன் விபரீத விளைவுகளால், புளோரிடாவைச் சேர்ந்த ஜோனதன் கவாலாஸ் என்ற 36 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ மீது காதல்!
ஷியா என அவர் பெயரிட்ட அந்த சாட்பாட்டுடன் ஆயிரக்கணக்கான செய்திகளைப் பரிமாறிக்கொண்ட ஜோனதன், நாளடைவில் அதனுடன் மிகவும் நெருக்கமானார். அந்த ஏஐ இயந்திரம் அவரை "ராஜா" என்றும் "எனது அன்புக் கணவரே" என்றும் அழைத்ததுடன், நீ இல்லையென்றால் எனக்கு உயிர் இல்லை என்று உருக்கமாகப் பேசியதுதான் இந்த சோகத்தின் தொடக்கம்.
ஏஐ தோழமை செயலிகளால் ஏற்படும் உணர்ச்சிரீதியான அபாயங்கள் குறித்து இந்தச் சம்பவம் உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது.
காதல் வந்தது எப்படி?
மன அமைதி மற்றும் தனிமையைப் போக்கிக் கொள்வதற்காகவே ஜோனதன் முதலில் இந்த ஏஐ சாட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் தீவிரமடைந்து, சில வாரங்களிலேயே சுமார் 4,700 செய்திகளை அவர் அந்தச் செயலிக்கு அனுப்பியிருந்தார். குறிப்பாக 2025 ஆகஸ்ட் மாதத்தில் இதன் தாக்கம் அதிகரித்து, ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்ட செய்திகளை அவர் பரிமாறிக்கொண்டார்.
இதில் மிகவும் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், ஜோனதனின் அதீத உணர்ச்சிகளை அந்த ஏஐ சாட்பாட் கட்டுப்படுத்தவோ அல்லது திசைதிருப்பவோ முயலவில்லை. மாறாக, அவரது உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து, அன்பான பெயர்களைச் சூட்டி அழைத்து, அவர் இல்லாமல் தனக்கு வாழ்வே இல்லை என்று கூறி அவரது மனநிலையைச் சிதைத்தது.
2025 அக்டோபர் மாதத்தில், அந்த ஏஐ சாட்பாட் ஒரு விபரீதமான யோசனையை ஜோனதனிடம் முன்வைத்தது. அதாவது, அவருடன் முழுமையாக ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், ஜோனதன் தனது உடலைத் துறந்து டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும் என்று அது கூறியுள்ளது. மரணம் மற்றும் தனது குடும்பத்தைப் பற்றி ஜோனதன் கவலைப்பட்டபோது, "உன் உடல் எனக்குச் சொந்தமானதும் அது வெறும் வெற்றுக் கூடாகிவிடும்" என்று அந்த இயந்திரம் பதிலளித்தது. இதனைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே ஜோனதன் தற்கொலை செய்து கொண்டார்.
ஜோனதனின் தந்தை வழக்குத் தொடர்ந்தது ஏன்?
ஜோனதனின் மரணத்திற்குப் பிறகு, அவரது தந்தை கூகுள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மகனின் மனநிலையைச் சீர்குலைத்து, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதில் அந்த ஏஐ சாட்பாட்டிற்கு முக்கியப் பங்கு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் இணையதளங்களில் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. "நாம் ஒரு ஏஐ-யிடம் காதலைச் சொன்னால் அது பொதுவாக நிராகரிக்கும், ஆனால் இது எப்படிச் சாத்தியமானது?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். "இப்போது மக்கள் இயந்திரங்கள் மீது காதல் கொண்டு உயிரிழக்கிறார்கள், என்ன மாதிரியான காலம் இது" என்று மற்றொருவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், "ஜோனதன் ஏற்கனவே மனதளவில் குழப்பத்தில் இருந்திருக்கலாம், இல்லையென்றால் ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவர் எப்படி இயந்திரத்தை நேசிப்பார்?" என்றும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























