தேசிய அளவிலான பேண்டி விளையாட்டு: தமிழகத்திற்கு முதலிடம் - காஞ்சிபுரம் வீரர்கள் 20 பதக்கங்களை வென்று சாதனை
"தேசிய அளவில் நடைபெற்ற பேண்டி போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது."

கோவாவில் நடைபெற்ற 8-வது இந்திய அளவிலான பேண்டி (Bandy) விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய காஞ்சிபுரம் மாவட்ட வீரர்களுக்கு நகரில் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
கோவாவில் நடந்த விறுவிறுப்பான போட்டிகள்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவாவில் 8-வது ஆண்டு தேசிய பேண்டி விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தொடரில் ஹரியானா, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில், மாநில அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
20 பதக்கங்களை அள்ளிய காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி
தமிழகத்தின் சார்பாக இந்தப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வீரர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி, தமிழக அணி முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்தனர். தனிப்பட்ட சாதனையாக காஞ்சிபுரம் வீரர்கள் 15 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் (சில்வர்) என மொத்தம் 20 பதக்கங்களை வென்று குவித்து, பட்டு நகரமான காஞ்சிபுரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா
வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வளாகத்தில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. அகாடமி நிறுவனர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி முருகேசன், அகாடமி தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் தமிழ், யுகேஷ் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் முன்னிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு நகரமாக மாறும் காஞ்சிபுரம்
விழாவில் பேசிய முக்கியப் பிரமுகர்கள், காஞ்சிபுரம் ஏற்கனவே 'பட்டு நகரம்' மற்றும் 'கோயில் நகரம்' என்று உலகப்புகழ் பெற்றுள்ள நிலையில், தற்போது வீரர்களின் தொடர் வெற்றிகளால் 'விளையாட்டு நகரம்' என்ற புதிய அடையாளத்தைப் பெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தின் பெயரை நிலைநாட்ட வேண்டும் என அவர்கள் ஊக்கப்படுத்தினர்.
ஒலிம்பிக் கனவு: விரைவில் அறிவிப்பு
இந்த விழாவின் முத்தாய்ப்பாக ஒரு முக்கியத் தகவல் பகிரப்பட்டது. கோவா போட்டியில் சிறந்து விளங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், குளிர்கால பேண்டி ஒலிம்பிக் (Winter Bandy Olympics) போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகப் பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் காஞ்சிபுரம் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















