IPL vs PSL: ஐபிஎல்-ஐ தேர்ந்தெடுத்த ஜிம்பாப்வே வீரர்! பழிவாங்கிய PCB.. பாகிஸ்தான் வாரியம் அதிரடித் தடை..
பிளெஸ்ஸிங் முசரபானிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் (PSL) தொடர்களுக்கு இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடச் சென்ற ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்த 27 வயதான முசரபானி, திடீரென அதிலிருந்து விலகி நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார். இதன் காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பிஎஸ்எல் தொடரில் விளையாட பாகிஸ்தான் வாரியம் தடை விதித்து செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது.
தடைக்கு என்ன காரணம்?
பிஎஸ்எல் ஒப்பந்த விதிகளின்படி அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட பிறகு, முசரபானி அதை மீறி வேறு ஒரு தொடரில் இணைந்தது ஏற்கத்தக்கதல்ல என்று பிசிபி ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
முசரபானி மட்டுமல்லாமல், இலங்கை வீரர் தசுன் ஷனகா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் பிஎஸ்எல் அணிகளைத் தவிர்த்து ஐபிஎல் தொடரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுக்கும் விரைவில் இதே போன்ற தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நைட் ரைடர்ஸ் அணியில் முசரபானி:
கொல்கத்தா அணி முதலில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், பிசிசிஐ (BCCI) அறிவுறுத்தலின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒரு அதிரடி வேகப்பந்து வீச்சாளரைத் தேடிய கேகேஆர் நிர்வாகம், 6 அடி 8 அங்குல உயரமுள்ள முசரபானியைத் தேர்ந்தெடுத்தது.
ஐபிஎல்-இல் முசரபானியின்:
இஸ்லாமாபாத் யுனைடெட் உடனான ஒப்பந்தத்தை விட ஐபிஎல் வாய்ப்பே சிறந்தது என அவர் கருதினார்.கேகேஆர் அணிக்காக இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பணமா? விசுவாசமா?
பாகிஸ்தான் வாரியத்தின் இந்த கடுமையான நடவடிக்கை, ஐபிஎல் தொடரின் அசுர வளர்ச்சியையும் அதன் நிதி பலத்தையும் கண்டு பிசிபி கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது."ஒரு வீரருக்கு இரண்டு ஆண்டு தடை என்பது பெரிய இழப்புதான். ஆனால், உலகத்தரம் வாய்ந்த ஐபிஎல் தொடரில் கிடைக்கும் புகழும், கோடிக்கணக்கான வருமானமும் இதுபோன்ற பிராந்திய லீக் தடைகளை விடப் பெரியதாக வீரர்களால் பார்க்கப்படுகிறது."
சர்வதேச கிரிக்கெட்டில் கிளப் கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில், வீரர்களின் ஒப்பந்த விசுவாசத்திற்கும் ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களின் ஈர்ப்புக்கும் இடையிலான இந்த மோதல் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்




















