IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
ஐபிஎல் தொடரின் 19வது சீசனில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2 இன்று நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. தொடரை விட்டு 7 அணிகள் வெளியேறிய நிலையில், நாளை மறுநாள் அகமதாபாத்தில் ஆர்சிபி அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள அணி யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2 போட்டி இன்று நடக்கிறது.
குவாலிஃபயர் 2:
இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி என்பது சாத்தியமாகும் என்பதால் இரு அணிகளும் மிகுந்த விறுவிறுப்பாக ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
போட்டி நடைபெற உள்ள சண்டிகர் மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக திகழும் என்பதாலும், கடந்த போட்டியில் ராஜஸ்தான் 244 ரன்களை குவித்ததாலும் இந்த போட்டியிலும் ரன்மழை கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.
பேட்டிங் பலம்:
இரு அணியிலும் பேட்டிங் பலமாக உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய தூணாக சூர்யவன்ஷி உள்ளார். பவர்ப்ளேவில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் அவர் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், ஷனாகா, ஃபெரைரா என நீண்ட பேட்டிங் கொண்டிருந்தாலும் அவர்களிடம் ஒரு நிலையான ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை.
குஜராத் அணியைப் பொறுத்தமட்டில் அந்த அணிக்கு பலமே சுப்மன்கில் - சாய் சுதர்சன் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப். இந்த ஜோடியை ஆரம்பமே பிரித்துவிட்டால் குஜராத்திற்கு பெரிய சிக்கல் ஏற்படும். பட்லர் சிறப்பாக ஆடிக்கொடுக்க வேண்டியது குஜராத்திற்கு கட்டாயம் ஆகும். மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ராகுல் திவேதியா, ஹோல்டர் உள்ளனர். இவர்களும் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.
பந்துவீச்சு:
இந்த மைதானத்தில் பந்துவீசுவது சவாலான ஒன்றாகும். இருப்பினும், சிறப்பாக பந்துவீசும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் அந்த அணிக்கு பந்துவீச்சில் பலமாக ஆர்ச்சர் உள்ளார். அவரை திறம்பட குஜராத் கையாண்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும். பர்கர், ப்ரிஜேஸ் ஷர்மா, புஞ்சா என பந்துவீச்சு அவர்களிடம் வலுவாக உள்ளது.
குஜராத் அணியில் முகமது சிராஜ், ரபாடா, ஹோல்டர், அர்ஷத் கான் என அவர்களின் பந்துவீச்சு வரிசையும் வலுவாக உள்ளது. சூர்யவன்ஷி விக்கெட்டை விரைவில் எடுத்தால் மட்டுமே இவர்களால் அழுத்தமின்றி அடுத்தடுத்து பந்துவீச முடியும்.
ஆல்ரவுண்டர்கள்:
ராஜஸ்தான் அணியின் பிரதான ஆல்ரவுண்டராக ஜடேஜா உள்ளார். அவரது அனுபவமும், அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையும் ராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக உள்ளது. குஜராத் அணிக்கு பிரதான ஆல்ரவுண்டராக ஹோல்டர் மற்றும் ரஷீத்கான் உள்ளனர். இருவரும் நன்றாக சிக்ஸர் அடிக்கும் திறமை வாய்ந்தவர்கள்.
இந்த சூழலில், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி இரு அணிகளும் இறுதிப்போட்டி செல்ல முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ட்ரெண்டிங் செய்திகள்



















