Pakistan T20 Worldcup: பாவம்டா பங்காளி! உலகக்கோப்பையில் முரட்டு அடி வாங்கிய பாகிஸ்தான்! கடுப்பில் ஃபைன் போட்ட பிசிபி..
டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிப்பெறாத பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து பிசிபி கறார் காட்டியுள்ளது

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக்கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு கடுமையாக தண்டனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ளது.
பில்டப் மட்டும் தான்
பாகிஸ்தான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் வழக்கம் போலவே சொதப்பலாக அமைந்தது. ஆனால் தொடருக்கு முன்பு அந்த அணி போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது, இந்திய உடனான போட்டியில் விளையாட முடியாது என ஏகப்பட்ட பஞ்சாயத்தை கிளப்பி ஒரு பில்டப்பை காட்டிக்கொண்டு கடைசியில் ஐசிசியின் நெருக்கடிக்கு பணிந்து இந்தியாவுடன் ஆட ஒத்துக்கொண்டது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஏறக்குறைய தோல்வியின் விளிம்புக்கு சென்று போராடியே வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதல் என்று அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தான் மோதலில் இந்திய அணியை பிரித்து மேய்த்தது, இனிமேல் இதை கிரிக்கெட்டின் Greatest Rivalry என்று அழைக்காத வகையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை போட்டு தாக்கியது, அதன் பின்னர் அமெரிக்கா, நமீபியா அணிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தட்டுத்தடுமாறி சென்றது.
சூப்பர் 8-ல் லக் இல்லை
அடுத்ததாக சூப்பர் 8-ல் சுற்றில் நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டி மழையால் ரத்தாக அடுத்து இங்கிலாந்து அணியுடன் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது, இலங்கை அணியுடனான கடைசி போட்டியில் நூழிலையில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றி அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதிப்பெற போதுமானதாக இல்லை. பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை அந்த அணியின் முன்னாள் வீரர்களே கடுமையாக விமர்சித்தது.
அபராதம் விதிப்பு:
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அறிக்கையின்படி, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தேசிய அணியின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிதி அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் பாகிஸ்தான் 50 லட்சம் (சுமார் ரூ. 16.28 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக போட்டியில் அவர்களின் தகுதி நம்பிக்கையை கணிசமாகக் குறைத்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.





















