IND vs NZ 3rd T20: இதெல்லாம் ஒரு டார்கெட்டா! 10 ஓவரிலே 155 ரன்களை எட்டியது.. தொடரை வென்ற இந்தியா!
IND vs NZ: நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்களை 10 ஓவர்களிலே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது.
154 ரன்கள் டார்கெட்:
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் மோதும் 3வது போட்டி கவுகாத்தியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியை இந்திய அணி பந்துவீச்சில் சவால் அளித்தது. இதனால், இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இஷான் அதிரடி:
மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலே சாம்சன் ஹென்ரி பந்தில் போல்டானார். இதையடுத்து, அபிஷேக் சர்மா - இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் ஆட்டத்தை முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இஷான் கிஷான் சந்தித்த 2வது பந்தையும், 3வது பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த அபிஷேக் சர்மாவும் சிக்ஸருடனே ஆட்டத்தை தொடங்கினார். இவர்கள் அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
14 பந்துகளில் அபிஷேக் அரைசதம்:
இதனால், 4வது ஓவரிலே சுழலை கொண்டு வந்தார் கேப்டன் சான்ட்னர். சோதி வீசிய சுழலுக்கு இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அவுட்டானார். அதன்பின்பு, அபிஷேக் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.
அபிஷேக் சர்மா யார் பந்துவீசினாலும், பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். இதனால், ரன் ரேட் அதே வேகத்தில் சென்றது. அவருக்கு பக்கபலமாக சூர்யகுமார் யாதவ் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இந்திய அணிக்காக அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
7 ஓவரிலே 100 ரன்கள்:
இந்திய அணி 7வது ஓவரிலே 100 ரன்களை கடந்தது. ஹென்ரி, ஜேக்கப் டஃபி, ஜேமிசன், இஷ் சோதி, கேப்டன் சான்ட்னர் என யார் வீசினாலும் அதிரடி காட்டினர். மைதானத்தில் பனியின் தாக்கமும் இருந்ததால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச மிகவும் சிரமப்பட்டனர். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது.
10 ஓவர்களில் வெற்றி:
மைதானத்தில் எந்தவொரு தாக்கத்தையும் நியூசிலாந்து அணியால் ஏற்படுத்த முடியவில்லை. மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது.
அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இரு தரப்பு தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 9வது டி20 தொடர் வெற்றி இதுவாகும்.
ஜேக்கப் டஃபி 2 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹென்ரி , சோதி, சான்ட்னர் ஆகியோர் 2 ஓவர்களில் தலா 28 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















