T20 Captaincy: சூர்யாவுக்கு ‘செக்’ வைத்த பிசிசிஐ.. டி20 க்கு கேப்னாகும் சேட்டன்.. அடுத்து கில் தான்
தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் அதிரடி மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ (BCCI) ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக, நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் இந்தியா 52 போட்டிகளில் விளையாடி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களை விட அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ள சூர்யா, புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் வெற்றிகரமான டி20 கேப்டனாகத் திகழ்கிறார்.
சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி மற்றும் ஃபார்ம்
அவரது தலைமையின் கீழ் இந்த ஆண்டு இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய கேப்டனை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் சமீபகாலமாக கவலையளிக்கும் விதமாக உள்ளது. அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாடிய 40 போட்டிகளில் 921 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஆறு அரைசதங்கள் அடங்கும். அமெரிக்காவிற்கு எதிராக அவர் எடுத்த 84 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அவரைத் தக்கவைக்கவும், கேப்டன் பொறுப்பின் அழுத்தத்தைக் குறைக்கவும் பிசிசிஐ இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிகிறது.
ஏன் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை?
முன்னதாக கேகேஆர் அணியை ஐபிஎல் சாம்பியனாக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. ஆனால் தற்போது சஞ்சு சாம்சன் பெயர் அந்தப் பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளது. 2026 டி20 உலகக்கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாவிட்டாலும், விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
குறிப்பாக இறுதிப்போட்டியில் அவர் ஆடிய 89 ரன்கள் விளாசிய அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நீண்ட காலம் வழிநடத்திய அனுபவம் கொண்ட சஞ்சு, தற்போது சிஎஸ்கே அணியால் வர்த்தக ரீதியாக வாங்கப்பட்டுள்ளார். அவர் ஒரு விக்கெட் கீப்பராக இருப்பதால் மைதானத்தில் ஆட்டத்தை எளிதாகக் கையாள முடியும் என்பது பிசிசிஐ-ன் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்தடுத்த தொடர்களும் புதிய மாற்றமும்
இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவே கேப்டனாக நீடிப்பார் என்றும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ-ன் இந்த அதிரடி முடிவு இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















