மேலும் அறிய
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்.. பக்தர்களின் பரவசம்!
உச்சியில் உள்ள முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில்
Source : whatsapp
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செளமிய நாராயண பெருமாள் கோயில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற செளமிய நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக உள்ளது. இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உணர்த்தும் வகையில் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. இதில் உச்சியில் உள்ள முதல் நிலைக்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்றது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பிப். 1-ம் தேதி திருவீதி ஸ்ரீ சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. பிப். 2-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை அனுக்கை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. மாலையில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பிப். 3-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிப். 4-ம் தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு ஹோமம் மற்றும் 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.26 மணி முதல் 10.18 மணிக்குள் மூலவர் தங்க விமானத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகள் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் செய்யப்பட்டன. மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன், கவுரவத் தலைவர்கள் செந்தில் தொண்டைமான் மற்றும் மணிகண்டன் செட்டியார், டிரஸ்ட் தலைவர் காந்தி, துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலர் ஸ்ரீராம் சரவண பட்டாச்சாரியார், திருப்பணிக்குழுத் தலைவர் அரளிக்கோட்டை ராஜ்மோகன், அருணகிரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 2 கூடுதல் துணை கண்காணிப்பாளர்கள், 3 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















