Shivaratri 2025: மயிலாடுதுறையில் பனிக்கட்டி சிவலிங்கம், பழமை வாய்ந்த கோயில்களில் விடிய விடிய மகாசிவராத்திரி விழா..!
சிவராத்திரியை முன்னிட்டு பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் பலர் பங்கேற்று விடிய விடிய கண்விழித்து வழிபாடு செய்தனர்.

சிவ வழிபாட்டிற்கு உகந்தநாளான மகா சிவராத்திரி அன்று 4 கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்து சிவ புராணத்தைப் பாடியும், சிவனுக்கு உரிய மந்திரங்களை உச்சரித்தும் வழிபாடு மேற்கொள்வர்.
பார்வதிதேவி சிவ பெருமானை வழிபட்ட தினம்
பார்வதிதேவி சிவ பெருமானை வழிபட்டு இரவு முழுவதும் பூஜை நடத்தி வழிபட்ட நாளையே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது என கூறப்படுகிறது. சிவராத்திரி ஆனது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சிவனை வழிபடுவதன் மூலம் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என ஐதீகம். அந்த வகையில் இந்த ஆண்டு, மகாசிவராத்திரியின் சதுர்தசி திதி பிப்ரவரி 26 காலை 11:08 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 27 காலை 08:54 மணிக்கு நிறைவடைகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மகா சிவராத்திரி விழா நாடுமுழுவதும் நேற்றிரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் லட்சம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய வழிபாடு செய்தனர்.
அமர்நாத் பனி லிங்கம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் அமர்நாத் பனி லிங்கம் போன்று 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அறுபத்து மூவர் பேட்டையில் அமைந்துள்ள சப்த மாதா ஆலய வளாகத்தில் இந்த ஆண்டு பனிலிங்கம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மலர்மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை லிங்கத்துக்கு சாற்றப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர், பனி லிங்கத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 13 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் சிவராத்திரியன்று பனிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பனி லிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
177 ஆம் ஆண்டு சிவராத்திரி விழா
ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமி திருக்கோயிலில் 177 ஆம் ஆண்டு சிவராத்திரி விழா; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் 177 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தினை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து பக்தர்கள் புடைசூழ புறப்பாடு செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
அதனை தொடர்ந்து ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமிக்கு புனித நீர் கொண்ட கலசத்தினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. "ஈசனுடன் ஒரு இரவு" என்று சுவாமிக்கு முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால மற்றும் நான்காம் கால சிறப்பு புனித நீர் அடங்கிய கலச அபிஷேகங்கள் விடியற்காலை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயில்
கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கார்கோடநாதர் சுவாமிக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முற்காலத்தில் சப்த நாகங்களில் ஒன்றான ராஜநாகமாக கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இந்த தலம் கார்கோடகன்குடி என்று அழைக்கப்பட்டு தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது. ராகு-கேது பரிகாரத்தலமான இக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
முட்டம் ஸ்ரீ மஹாபலீஸ்வரர் கோயில்
முட்டம் ஸ்ரீ மஹாபலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் முட்டம் கிராமத்தில் ஸ்ரீ மஹாபலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி பின்னர் முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் சிவவழிபாடு செய்து இழந்த செல்வங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இந்த கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக்கொட்டகையில் வழிபாடு நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியையொட்டி இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்கள் கொண்டு 4 கால சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இரவு 8 மணிக்கு முதல் கால அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணி, 3 மணி, 5 மணி என நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
வைத்தீஸ்வரன் கோயில் 3008 தீப வழிபாடு
வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 3008 தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளும், நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் செவ்வாய் ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சாமிக்கு நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் கோயில் கொடிமரம் அருகே வண்ண மாவினால் சிவன் உருவம் மற்றும் சிவலிங்கம் வரைந்து தீபம் ஏற்றினர். அதுமட்டுமின்றி கோயில் முழுவதும் 3008 தீப விளக்குகள் ஏற்றி அதிகாலைவரை எண்ணை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளும் பெங்களூர் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மயில் உருவில் அபயாம்பிகை அம்மன்
மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. மயூரநாட்டியாஞ்சலி கடைசிநாள் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். மயிலாடுதுறையில் மயில் உருவில் அபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த தலமான புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு துவங்கி அதிகாலை வரை நான்கு காலங்களாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி அம்பாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தில் சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் விடியவிடிய நடைபெற்ற மயூரநாட்டியாஞ்சலி கடைசிநாள் நிகழ்ச்சியில் ஸ்பந்தா டான்ஸ் கம்பெனி லீலா சாம்சன் நாட்டியம், நந்தனார் சரிதம், பஞ்சபூத மகிமா, அடியார் கண்ட அறன், மோகினியாட்டம், உள்ளிட்ட பல்வேறு பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நாடகங்களை அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகள் மும்பை, கேரளா, பெங்களுர், உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட குழுவினரின் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, ஆர்டிஓ விஷ்ணுபிரியா உள்ளிட்ட ஏரோளமானோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இறைபணி குழுவினர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு விடியவிடிய அன்னதானம் வழங்கினர்.
மாதானம் பசுபதீஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடைத்த மாதாளம் கிராமத்தில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோயிலில் சிவராத்திரி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முதல் கால பூஜை இரவு 7மணி அளவில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பசுபதீஸ்வரர் க்குசிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
ஓதனேஸ்வரர் கோயிலில்
எடமணல் ஓதனேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாலை முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகளிலும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் விடிய விடிய ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
சிவலோகநாதர் சுவாமி கோயில்
இதே போல் சீர்காழி அருகே தென்னங்குடி கிராமத்தில் சொர்ணமுகி அம்பாள் உடனுறை சிவலோகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். கடைக்கண் விநாயகநல்லூர் கைலாசநாதர்,மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர்,மாதிரவேளூர் மாதலீஸ்வரர்,எடமணல் காசி விஸ்வநாதர், திருமுல்லைவாசல் முல்லைவன நாதர், வடரங்கம் ஜம்புகேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று காலை வரை நான்கு கால பூஜை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பால்குடங்கள், அலகுகாவடிகள், பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிவராத்திரி விழா உத்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக சிவராத்திரியை முன்னிட்டு காவடிகள் ஊர்வலம் நடந்தது. முன்னதாக கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காவடிகளுடன் காளி வேடம் அணிந்த பக்தர்களும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

