மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் மாசி பெருவிழா தேரோட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்

விழுப்புரம்: மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் மாசி பெருவிழா தேரோட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 1035 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 63 அடி உயரம் கொண்ட இந்த திருத்தேர் ஆண்டுதோறும் புதிய கட்டு தேர் ஆக உருவாக்கப்படும் என்பது மேல்மலையனூர் தேர் வடம் பிடித்தல் உற்சவத்தின் சிறப்பாகும்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய மாசி பெருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழாவின் இரண்டாம் நாளில் மயானக்கொள்ளை நிகழ்வும்,ஐந்தாம் நாளில் தீமிதி உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் ஏழாம் நாளான இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தேர் வடம் பிடித்தல் உற்சவத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அப்பொழுது செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
அதிகளவு கூட்டம் காரணமாக சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மேல்மலையனூர் மாசி பெருவிழா தேர் வடம் பிடித்தல் உற்சவத்தில் இழுக்கப்படும் தேர் ஆனது தரை முதல் கலசம் வரை 63 அடி உயரம் கொண்ட புதிய கட்டு தேர் ஆக ஆண்டுதோறும் புதியதாக உருவாக்கப்படும் என்பது மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மாசி பெரு விழா தேரோட்டத்தின் சிறப்பாகும்.
இன்று மேல்மலையனூர் மாசி பெரு விழா தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இதேபோல் மேல் மலையனூர் பகுதியில் அமைந்துள்ள நான்கு அரசு மதுபான கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது.
இதனிடையே மேல்மலையனூர் தேர் வடம் பிடித்தல் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணவ் ஐபிஎஸ் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி, 24 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1035 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வடக்கு வாசல் பகுதி, கோவில் உதவி ஆணையர் அலுவலகம் பகுதி வள்ளலார் கோயில் மற்றும் மீனவர் சமுதாய மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 மருத்துவர்கள்,10 செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் 5 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 அவசர மருத்துவ உதவி 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்களுக்கு போதுமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.























