சித்திரை மாத அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் மாத சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

தமிழ் மாதம் சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பழமையான திருவெண்காடு வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற சிவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.
மேலும் பல சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.

மருத்துவா சூரனால் தாக்குதலுக்கு உள்ளான நந்தி பகவான்
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார். தொடரும் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கியதாக புராண வரலாறு. அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோயிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்திரை அமாவாசை தினம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் குறிப்பிட்ட சில அமாவாசை அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ் மாதமான சித்திரை மாத அமாவாசை அடுத்து சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர். தீர்த்தவாரி பூஜைகளை சரபேஸ் குருக்கள் செய்து வைத்தார்.























