(Source: Poll of Polls)
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் 9 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்! துர்கா ஸ்டாலின் பங்கேற்று திருசாந்து இடித்து வழிபாடு..!
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் பங்கேற்று திருசாந்து இடித்து வழிபாடு மேற்கொண்டார்.

சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

மேலும் பல சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குடமுழுக்கு
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா நாளைய தினம் ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. இதற்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று வழிபாடு
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது வருகிறது. கிழக்கு கோபுரம் அருகில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 95 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி திருவெண்காடை பூர்விகமாகக் கொண்ட துர்கா ஸ்டாலின் மூன்றாம் கால யாகசாலை பூஜையில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து யாகசாலை பூஜை பொருட்களை பொது மக்களுடன் கலந்து கொண்டு கோயிலில் இருந்து ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து சென்று பிராத்தனை செய்தார். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் செய்யப்பட்டு பூர்ணாக் ஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பிரம்மாண்ட ஆர்ச் அமைத்து வரவேற்பு
பின்னர் கும்பாபிசேக விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் தனது சொந்த ஊரில் தங்கியுள்ள நிலையில் இரவு கோயிலில் சிலைகள், விக்ரகங்கள் மற்றும் கலசங்கள் வைக்க திருசாந்து இடிக்கும் பணி நடைபெற்றது. அதில் பல்வேறு பக்தர்கள் திருசாந்து இடிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்களும் திருசாந்து இடித்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருகை புரிந்த தமிழக முதல்வரின் துணைவியாரை வரவேற்று ராஜ கோபுர வடிவில் பிரமாண்டமான ஆர்ச் அமைத்து திமுக நிர்வாகிவரவேற்பு அளித்தார்.





















