மூஷிக வாகனத்தில் விநாயகர் ! புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவசம்,வைர கிரீடம் சாத்தப்பட்டது.

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவசம்,வைர கிரீடம் சாத்தப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்!
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா
விநாயகர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது. சதுர்த்தியை முன்னிட்டு தனி நபர் அர்ச்சனை, விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்க 15 ஆயிரம் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. இத்துடன் சர்க்கரை பொங்கல், புளியோதரை உட்பட 9 வகையான பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடைசாற்றப்பட்டு, 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இரவு 10 மணி வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது. சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.






















