காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
"காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளி (ஓணகாந்தேஸ்வரர்) திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் வீற்றிருக்கும், ஓணகாந்தன் தளி எனப்படும் ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இத்திருக்கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் மற்றும் ஜலந்தரேஸ்வரர் என மூன்று சுயம்பு லிங்கங்கள் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றன.
கோவிலின் தல வரலாறு என்ன?
சுந்தரர் இத்தல இறைவனிடம் பொன் கேட்டபோது, இறைவன் இங்குள்ள புளிய மரத்தின் பழங்களைத் தங்கமாக மாற்றிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வறுமை நீங்கவும், செல்வம் பெருகவும் பக்தர்கள் இங்கு வழிபடுவது வழக்கம்.
இக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ கணபதி பூஜை,ஸ்ரீ நவகிரக ஹோமம்,தன பூஜை,கோ பூஜை மற்றும் நான்கு கால யாகபூஜைகளுடன் மஹா பூர்ணாஹுதி நிறைவுற்று,பின் மேளத் தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க,மங்கள் இசை இசைக்க,பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் யாக சாலையிலிருந்து புறப்பாடாகி,கோபுர கலசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா
பின்னர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் "பக்தி முழக்கங்களுடன் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டும்,பின் அனைத்து விமானங்கள் மூலஸ்தானம்,பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களின் மீதும் கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















