Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?
சென்னையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இந்த கோயில் கே.கே.நகரை அடுத்துள்ள எம்ஜிஆர் நகரில் அமைந்திருக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் பற்றிக் காணலாம்.

சென்னையில் அமையப் பெற்றுள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் களைகட்டியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முருகனின் இரண்டாம் படைவீடு
தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஊரானது கடற்கரை சார்ந்த தலமாக அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் குன்றின்மேல் இல்லாத ஒரே ஸ்தலம் என்றால் அது திருச்செந்தூர் தான். இக்கோயிலில் முருகன் சுப்பிரமணியசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த ஸ்தலம், குருபகவானுக்குரிய இடம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் கடற்கரையில் வள்ளி குகை, நாழிக்கிணறு, மூவர் ஜீவசமாதி, அய்யா வைகுண்டர் கோவில் என பலவும் அமைந்திருக்கிறது. இத்தகைய திருச்செந்தூருக்கு சென்றால் திருப்பம் கிடைக்கும் என பலரும் அங்கு சென்று வருகின்றனர். ஆனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் திருச்செந்தூருக்கு செல்ல முடியாது. முருகப்பெருமான் மனது வைத்தால் மட்டுமே காலம் கனியும் என்பது ஐதீகமாக உள்ளது.
சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில்
இப்படியான நிலையில் சென்னையில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இரண்டாம் படை வீடு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோயிலை நாடி வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். இந்த கோயிலானது சென்னை எம்ஜிஆர் நகர் அஜந்தா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. மிகச் சிறிய கோயில் என்றாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
இங்கு வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அதனால் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர். காலையில் 6 - 10 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையும், விசேஷ காலங்களில் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். திருச்செந்தூர் செல்லாமலேயே முருகப்பெருமானின் அருளைப் பெற நினைக்கும் இயலாதவர்கள் இங்கு வழிபடலாம்.
விறுவிறுப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக பணிகள்
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. புதுப்பிப்பு பணிகள் நிறைவுற்று அலங்கார விளக்குகள் போடப்பட்டு ஜொலிக்கிறது. மகா கும்பாபிஷேகம் வரும் மார்ச் 25ம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















