Trump Modi: மோடிக்கு புகழாரம்.. திடீரென போன் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன சங்கதி?
பிரதமர் மோடி மகத்தான பணியைச் செய்கிறார் என்று பாராட்டியதுடன், அவருக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தது முதலே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான உறவில் ஏராளமான முரண்பாடுகள் உருவாகி வருகிறது. சுமார் 7.5 லட்சம் கோடி வர்த்தகம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்:
இந்திய பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.
இதுதொடர்பாக, இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் எனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி எனது அருமை நண்பர் அதிபர் ட்ரம்ப். இந்தியா - அமெரிக்கா விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நானும் உங்களைப் போல உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலுக்கு உறுதியான தீர்வு காணும் உங்கள் முயற்சிக்கு ஆதரவுகள் என்று பதிவிட்டுள்ளார்.
Thank you, my friend, President Trump, for your phone call and warm greetings on my 75th birthday. Like you, I am also fully committed to taking the India-US Comprehensive and Global Partnership to new heights. We support your initiatives towards a peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) September 16, 2025
மோடி மகத்தான பணி:
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது எக்ஸ் பக்கத்தில் எனது நண்பர் பிரதமர் மோடியுடன் அருமையான தொலைபேசி உரையாடல். நான் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். அவர் மகத்தான பணியைச் செய்கிறார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
Just had a wonderful phone call with my friend, Prime Minister Narendra Modi. I wished him a very Happy Birthday! He is doing a tremendous job. Narendra: Thank you for your support on ending the War between Russia and Ukraine! President DJT
— Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) September 16, 2025
50 சதவீத வரி:
இவர்கள் இருவரின் இந்த இரு பதிவு இந்தியா - அமெரிக்க உறவில் சுமூகமான போக்கை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், இந்த வரி விதிப்பிற்கு பிறகு இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமான சூழலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, வரி விதிப்பு தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியையும், வேண்டுகோளையும் மாறி, மாறி தெரிவித்த பிறகும் அமெரிக்கா வரியை 50 சதவீதமாக மாற்றிய பிறகு, ட்ரம்ப் மோடிக்கு 4 முறை அழைப்பு விடுத்தார்.
ஆனால், பிரதமர் மோடி அவரது அழைப்பை நிராகரித்தார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா - சீனா -ரஷ்யா உறவு மிகவும் வலுவாக இருந்தது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. வழக்கமாக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா இந்த வரி விதிப்பிற்கு பிறகு சீனாவுடனும் நெருக்கம் காட்டத் தொடங்கியது.
வரி குறையுமா?
இது அமெரிக்காவிற்கு பீதியை உண்டாக்கியது. இதன்பின்னர், மீண்டும் இந்திய உறவை சுமூகமாக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசியல் நிபுணர்கள் அமெரிக்க அரசை அறிவுறுத்தினர். இந்த நிலையிலே பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் நேற்று போனில் பேசியுள்ளனர். இவர்களது பேச்சில் வரி விதிப்பு, ஏற்றுமதி விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறையுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.




















