Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதை தவிர்க்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதோடு, ராஜதந்திர உறவுகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், டெஹ்ரானை தனியாக எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு எதிராக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தனிப்பட்ட முறையில் எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஒரு பரந்த மோதல், ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்ரேலை தனிமைப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிடம் நிதானத்தை கடைப்பிடிக்க வலியுறுத்திய ட்ரம்ப்
இஸ்ரேலின் சேனல் 12 நியூஸிடம் பேசிய ட்ரம்ப், ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையின் சாத்தியமான விளைவுகள் குறித்து நெதன்யாகுவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்ததாகக் கூறினார். மேலும், “பிபி (நெதன்யாகு) தான் செய்யும் செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறியதாகவும், ஏனெனில் விரைவில் அவர் ஈரானுக்கு எதிராக தனித்து விடப்படலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மோதலின் போக்கு குறித்து கவலை கொண்டிருந்த அப்பகுதியிலுள்ள பல அரசுகளின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, தனது தலையீடு நிகழ்ந்ததாக ட்ரம்ப் கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஒரு பெரிய மோதல் தீவிரமடைவதைத் தடுக்க, வாஷிங்டன் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று அந்த நாடுகள் விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து, இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட பதிலடியை குறைக்க முயன்றதாக அவர் கூறினார். “நெதன்யாகு மீது அழுத்தம் கொடுக்குமாறு 5 நாடுகள் என்னிடம் கேட்டுக்கொண்ட பிறகு, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய பதிலடியின் அளவை குறைக்க முயன்றேன்,” என்று ட்ரம்ப் கூறினார்.
“என்னுடைய தலையீட்டால் தாக்குலின் தீவிரம் குறைந்தது“
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலேயே நெதன்யாகு ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்ததாகவும், அமெரிக்காவிற்கு முறையாக தெரிவிக்கப்படுவதற்கு முன்பே, இஸ்ரேலிய விமானங்கள் ஈரானிய இலக்குகளை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார்.
அதிபரின் கூற்றுப்படி, அதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய தலைவர்களுக்கும், மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பின்னர் நெதன்யாகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் அந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளும், விமானங்களும் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டு, அந்த நடவடிக்கை திறம்படத் தொடங்கிய பின்னரே, வாஷிங்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார். இருப்பினும், தனது தலையீடு, திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் தீவிரத்தை குறைக்க உதவியதாக அவர் கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான் ஆர்வமாக உள்ளது - ட்ரம்ப்
அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் டெஹ்ரான் தொடர்ந்து ஆர்வமாக இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஈரான் ஆர்வமாக உள்ளது என்றும், அத்தகைய ஒரு முடிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்றும் அவர் சேனல் 12-லிடம் மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாக, சமீபத்திய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு முன்பு, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தருவாயில் இருந்ததாக, அதிபர் ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்திருந்தார்.
நேற்று, இரு தரப்பினரையும் "துப்பாக்கிச் சூட்டை" நிறுத்துமாறு ட்ரம்ப் பகிரங்கமாக தனது பதிவின் மூலம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை இடைநிறுத்தின. இருப்பினும், இரு அரசாங்கங்களும் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறை நிராகரிக்கவில்லை.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















