Trump US Election Reforms: வரியை போட்டு தாக்கியாச்சு.! அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; என்ன அறிவிப்புன்னு பாருங்க
உலக நாடுகளுக்கு வரிகளை போட்டு வதைத்த ட்ரம்ப், அடுத்ததாக தனது கவனத்தை உள்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபின் பல அதிரடிகளை அரங்கேற்றினார் டொனால்ட் ட்ரம்ப். அதில் முக்கியமானது, உலக நாடுகளுக்கு வரிகளை விதிப்பது. அதை வெற்றிகரமாக செய்து முடித்த நிலையில், தற்போது தனது கவனத்தை அமெரிக்க தேர்தலின் பக்கம் திருப்பியுள்ளார் ட்ரம்ப். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
தேர்தல் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்த நிலையில், வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சில நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதனிடையே, அடுத்த அதிரடியாக குடியேற்றம் மற்றும் குடியுரிமை விதிகளில் கடும் நிபந்தனைகளை விதித்தார் ட்ரம்ப். விசா நடைமுறைகள் கடுமையானதால், இந்தியா உட்பட பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதற்கும் அடுத்ததாக, தனது கவனத்தை தேர்தலின் பக்கம் திருப்பியுள்ள ட்ரம்ப், தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை என்று கூறியுள்ளார்.
“ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன; இனி வாக்களிக்க குடியுரிமை ஆதாரம் தேவை“
இது குறித்து பேசியுள்ள ட்ரம்ப், “அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்“ என்று கூறியுள்ளார். அமெரிக்க தேர்தலின்போது, வாக்களிப்பதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும், வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவற்றை சரி செய்யப் போவதாகவும், தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டப்பாடுகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களைத் தவிர, வாக்காளர்கள் வாக்களிக்க, அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை, அதாவது அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, இனிமேல் இ-மெயில் மூலம் வாக்களிக்க முடியாது என்றும், நோயாளிகள், ராணுவத்தினர் தவிர, மற்றவர்கள் யாரும் தபால் மூலம் வாக்களிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்காக, அனைத்து குடியரசுக் கட்சியினரும் போராடுமாறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருபுறம் வரி, குடியுரிமை, விசா கட்டப்பாடுகள் என அதிரடி காட்டிய ட்ரம்ப், மறுபுறம் பல்வேறு போர்களை நிறுத்துவதில் பங்காற்றினார். இப்போது, ஈரானுடன் போரை தொடங்கும் முனைப்பிலும் இருக்கிறார். இப்படி, ஏதாவது செய்துகொண்டே இருக்கும் ட்ரம்ப், எப்போதும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அதிரடி பட்டியலில் அடுத்த ஆட்டம் தான் தேர்தல் சீர்திருத்தங்கள். அவர் இன்னும் என்னென்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.























