Iran War US 15 Point Plan: இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே காசா மற்றும் உக்ரைன் போர்களுக்கு போட்டது போல், ஒரு அமைதித் திட்டத்தை ஈரானுக்கு முன்மொழிந்துள்ளார். அதை ஈரான் ஏற்குமா என்பதே தற்போதைய கேள்வி.

ஈரான் அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறிவரும் ட்ரம்ப், அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கினார். இதையடுத்து, ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியதால், மத்திய கிழக்கில் அது பெரும் போராக மாறியுள்ளது. அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு உதவும் அரபு நாடுகள் மீதும் ஈரான் அதிரடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காசா, உக்ரைன் போர்களுக்கு ட்ரம்ப் அமைதித் திட்டத்தை முன்மொழிந்தது போல், தற்போது ஈரானுக்கும் ஒரு அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். ஆனால், ஈரான் இதை ஏற்குமா என் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஈரான் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்
கடந்த மாத இறுதியில், அமெரிக்கா ஈரான் இடையே ஓமனில் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை, கிட்டத்தட்ட ஒரு சுமூகமான முடிவை நோக்கியயே சென்று கொண்டிருந்தது. ஈரான் பல்வேறு நிபந்தனைகளை ஒப்புக்கொண்டுள்ளதாகவே மத்தியஸ்தம் செய்த ஓமனும் தெரிவித்தது.
ஆனால், பிப்ரவரி 28-ம் தேதியான அன்றே, யாரும் எதிர்பார்க்காத வகையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் தாக்கத் தொடங்கியது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் வளைகுடா நாடுகளையும் போட்டுத் தாக்கி வருகிறது ஈரான்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்
மேலும், ஒரு முக்கிய நகர்வாக, உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து வழியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது ஈரான். அந்த வழியாக செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் தாக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் சிலவற்றின் கப்பல்களை மட்டும் அனுமதித்தது.
இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா மீது அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருபுறம், போரில் ஈரானின் கை ஓங்கிய நிலையில், உலக நாடுகள் பலவும், போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
திடீரென தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்திய ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தார். அப்படி செய்யாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி மையங்களை தாக்கி அழித்து, ஈரானை இருளில் மூழ்கடிப்போம் என எச்சரித்தார்.
ஆனால், அதற்கு அசராத ஈரான், ஒருவேளை அப்படி நடந்தால், அமெரிக்காவிற்கு உதவிவரும் நாடுகள் அனைத்தின் மின் கட்டமைப்புகளும் தாக்கப்படும் என பதிலுக்கு எச்சரித்தது.
இதையடுத்து, கெடு முடிவதற்கு முன்னதாகவே, திடீரென ஈரானுடன் 2 நாட்கள் நடந்த போச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததால், அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அப்படி ஏதும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், தங்கள் எச்சரிக்கையால் பயந்தே ட்ரம்ப் பின்வாங்கியதாகவும் ஈரான் கூறியது.
ட்ரம்ப் முன்மொழிந்த 15 அம்ச திட்டம் - ஈரானுக்கு அனுப்பி வைப்பு
எனினும், ஈரானுடன் ஆக்கப்பூர்வமான போச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார். இந்த முறை, மத்தியஸ்தர்கள் மூலம் தங்களுக்கு சில முன்மொழிவுகள் அமெரிக்காவிடமிருந்த வந்துள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போரை நிறுத்தும் வகையில், 15 அம்ச திட்டத்தை ஈரானுக்கு ட்ரம்ப் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போரில் மத்தியஸ்தம் செய்ய வந்த பாகிஸ்தான் மூலமாகவே இந்த திட்டம் ஈரானிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஊடகத்திலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரான் அதை ஏற்குமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
Before You Go
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















