Trump's Twist: பதில் வரியா போடுறீங்க.?! ட்ரம்ப்பிடம் சிக்கிய சீனா.. நூலிழையில் தப்பிய மற்ற நாடுகள்...
வரி விஷயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்துவரும் நிலையில், அந்நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு வரியை நிறுத்தி வைத்து, ட்ரம்ப் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்து, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத வரியை விதித்தார். ட்ரம்ப்பின் இந்த செயலுக்கு சீனா மட்டும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது. இந்நிலையில், தற்போது மற்ற நாடுகளுக்கான வரியை நிறுத்தி வைத்து, சீனாவுக்கான வரியை மட்டும் மேலும் உயர்த்தியுள்ளார் ட்ரம்ப்.
மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த ட்ரமப்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், வரி என்ற பெயரில் மற்ற நாடுகள் அமெரிக்காவை சுரண்டுவதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு குறைவான வரியே விதிக்கிறது என்றும் கூறினார். இதனால், தாங்களும் மற்ற நாடுகள் விதிக்கும் வரிக்கு சமமான எதிர் வரி, அதாவது பரஸ்பர வரி விதிக்கப்போவதாக அறிவித்து, பட்டியலையும் வெளியிட்டார்.
அதன்படி, சீனா - 34%, ஐரோப்பிய யூனியன் - 20%, வியட்நாம் - 46%, தைவான் - 32%, ஜப்பான் - 24%, இந்தியா - 26%, தென் கொரியா - 25%, தாய்லாந்து - 36%, ஸ்விட்சர்லாந்து - 31%, இந்தோனேஷியா - 32%, மலேசியா - 24%, கம்போடியா - 49%, இங்கிலாந்து - 10%, தென்னாப்பிரிக்கா - 30%, பிரேசில் - 10%, வங்கதேசம் - 37%, சிங்கப்பூர் - 10%, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் - 17%, சிலி, ஆஸ்திரேலியா - 10%, பாகிஸ்தான் - 29%, துருக்கி - 10%, இலங்கை - 44%, கொலம்பியா - 10% என்ற அளவில் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது.
தவித்த மற்ற நாடுகள்.. திருப்பி அடித்த சீனா.. டென்ஷனான ட்ரம்ப்
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பையடுத்து, மற்ற நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், சீனா மட்டும் திருப்பி அடித்தது. சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்து, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது.
இதைப் பார்த்து டென்ஷனான ட்ரம்ப், சீனா அறிவித்த வரியை ஏப்ரல் 8-க்குள் திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என எச்சரித்தார். ஆனாலும் அசராத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் அதற்கு கூடுதல் பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது. இதையடுத்து, ட்ரம்ப் உத்தரவுப்படி, சீனாவிற்கான வரி 104%-ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான வரி 84%-ஆக உயர்த்தப்படுவதாக சீனா அறிவித்தது. இதனால், உலகளவில் வர்த்தகத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டு, பல்வேறு நாடுகளின் வர்த்தக பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுவத்தி வைப்பு
இந்நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, சீனாவை தவிர, மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பக்கம் மூலமாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில், சீனாவிற்கான வரியை 125%-ஆக உயர்த்துவதாகவும், அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த நிதி சந்தைகள் தற்காலிகமாக மீண்டுள்ளன.
மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும், 90 நாட்களுக்கு 10% மட்டுமே பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு சீனா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே, தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















