Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன், ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

ரஷ்யா-உக்ரைன் இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடைபெற்றுவரும் நிலையில், அதனை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், உக்ரைனில் இன்னும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
ட்ரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை வைத்து, ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் ராணுவ தளபதிகள் மத்தியில் பேசிய அந்நாட்டு அதிபர் புதின், அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால், உக்ரைன் மீது போர் தீவிரப்படுத்தப்பட்டு, தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும், இன்னும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகிறது என்றும் கூறியுள்ளார். ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும் என்றும் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தவறினால், ராணுவ வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை
பலகட்ட அமைதி முயற்சிகளுக்குப் பின்னும், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதற்கு இன்னும் பலன் கிடைக்காமல் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே, அமெரிக்காவின் தொடர் அழுத்தத்தை அடுத்து, 'நேட்டோ' கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிடத் தயாராக இருப்பதாக, சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
ஏற்கனவே ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச அமைதித் திட்டம் ரஷ்யாவிற்கே சாதகமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், அது திருத்தி அமைக்கப்பட்டது. அதனையும் ஜெலன்ஸ்கி ஏற்காமல் இழுத்தடித்து வருவதாக ட்ரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். ஆனாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் தான், தற்போது ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு உக்ரைன் என்ன பதில் தரப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.





















