Pakistan ISI: பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை.. NIA விசாரணையில் திடுக் தகவல்...
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருக்கும் அதிர்ச்சித் தகவல், என்ஐஏ விசாரணையில் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை(NIA) விசாரித்து வருகிறது. ஏற்கனவே, 1,500 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ(ISI)-க்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பல்வேறு வகைகளில் பதிலடி கொடுத்து வருகிறது இந்திய அரசு. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால், போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இந்தியா போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
என்ஐஏ விசாரணை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தாக்குதல் தொடர்பான விசாரணயை என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் அப்பகுதியின் தரைத்தளத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் அளித்த தகவலின்படி, தாக்குதல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் பல்வேறு பகுதிகளை உளவு பார்த்துவந்ததாக தெரிகிறது. ஏப்ரல் 15-ம் தேதியே பஹல்காம் பகுதிக்கு வந்த தீவிரவாதிகள், பைசரன் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு, உள்ளூரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, பேதாப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களை உளவு பார்த்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பைசரன் பள்ளத்தாக்கு தவிர, மற்ற மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பலமாக இருந்ததால், அப்பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் என்ஐஏ, பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் வேலை செய்துவந்த, தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 20 தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.
அதில், 4 பேர், உளவு பார்ப்பதற்கு தீவிரவாதிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, 3 சேட்டிலைட் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஃபோன்களின் சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதில், அப்பகுதி தொழிலாளர்கள் சிலர் அவர்களுடன் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் என்ஐஏ கூறியிருந்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு தொடர்பு
இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்து தகவல்களை அளித்து வந்த பதான் கான் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர், ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் வசித்துவந்த நிலையில், அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இவர், 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றபோது, அவரை தொடர்புகொண்ட அந்நாட்டு உளவுத்துறையினர், பணம் தருவதாக ஆசை காட்டி, இந்தியா குறித்த தகவல்களை சேரித்து தருமாறு கேட்டுள்ளனர்.
பணத்தாசையால் பதான் கான் அதற்கு ஒப்புக்கொண்டு, பாகிஸ்தான் உளவுத்துறையின் கையாளாக மாறியுள்ளார். அவருக்கு, தகவல்களை சேகரிப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்தியா திரும்பிய பதான் கான், அவ்வப்போது பாகிஸ்தானுக்கு சென்று, உளவுத் தகவல்களை பரிமாறி வந்ததாக தெரிகிறது. பதான் கான் வசித்து வந்த ஜெய்சல்மார் பாகிஸ்தானின் சர்வதேச எல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, என்ஐஏ இதுவரை 2,500 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில், 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















