ஈரான் போர் ஓவர்... டிரம்பின் மாஸ்டர் பிளான்! அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு 'செக்' வைத்த வெள்ளை மாளிகை
Iran War : ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒரு காரணமாகக் காட்டி, ஈரானுடனான தனது இராணுவ மோதல் திறம்பட முடிவுக்கு வந்துவிட்டது என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாதாடுகின்றனர்.

ஈரான் உடனான ராணுவ மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாஷிங்டனில் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஏப்ரல் தொடக்கத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, ராணுவ நடவடிக்கைகளைத் தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இனி இல்லை என்று வெள்ளை மாளிகை வாதிடுகிறது. அமெரிக்க அரசின் இந்த அதிரடி நிலைப்பாடு, சட்ட ரீதியான விதிகளில் டிரம்ப் நிர்வாகம் தனக்கு சாதகமான விளக்கங்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களிடையே கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த போர்நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பிட் ஹெக்செத் செனட் சபையில் அளித்த வாக்குமூலத்தில், போர்நிறுத்தம் காரணமாக தற்போதைய நேரடி சண்டைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் 60 நாட்களுக்கு மேல் போர் நீடித்தால் நாடாளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற 'போர் அதிகாரத் தீர்மானத்தின்' காலக்கெடு இப்போது செல்லுபடியாகாது என்பது டிரம்ப் அரசின் வாதமாகும். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதல்கள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், ஏப்ரல் 7 முதல் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அரசு தரப்பு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடரும் ராணுவ முற்றுகையும் பதற்றமும்
நேரடி போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், களத்தில் பதற்றம் இன்னும் தணியவில்லை. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாக முடக்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் தீவிரமான கடல்வழி முற்றுகையைப் பராமரித்து வருகிறது. நேரடி சண்டையை நிறுத்திவிட்டு, அதே சமயம் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கும் இந்த இரட்டை நிலைப்பாடு, உண்மையில் போர் முடிந்துவிட்டதா என்ற கேள்வியை எம்.பி.க்களிடையே எழுப்பியுள்ளது.
போருக்கான காரணம்:
இந்தத் தற்போதைய மோதல் கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலுடன் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதித்தன. இது தொடர்பாக மார்ச் 2 அன்று டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்க்க நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வந்தாலும், அதை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரத்து செய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக இத்தகைய அதிகார மோதல்களில் நீதிமன்றங்கள் தலையிட விரும்பாத நிலையில், இது ஒரு நீண்ட அரசியல் போராட்டமாகவே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்























