American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
அமெரிக்க போர்க்கப்பலின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஈரான் திணறிவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, ஹவுதி, ஹெஸ்பொல்லா கிளர்ச்சியாளர்கள் போர்க்கப்பலை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரானை நெருங்கிவிட்ட நிலையில், அதனை கண்டுபிடிக்க முடியாமல் ஈரான் திணறி வருகிறது. இதனிடையே, ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஹவுதி மற்றும் ஹெஸ்பொல்லா கிளர்ச்சியாளர்கள், ஈரானை நெருங்கினால், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானை நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள்
ஈரானில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளட்டவைகளை எதிர்த்து, காமேனி அரசுக்கு எதிரான அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை துணை ராணுவப் படையைக் கொண்டு காமேனி அரசு அடக்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஈரான் அரசோ, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை. மாறாக, குறைந்த அளவிலான இறப்பு எண்ணிக்கையையே வெளியிட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட பலரை ஈரான் அரசு தூக்கிலிடப் போவதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், ஈரானில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர்களை தொடர்ந்து போராடுமாறும், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். அதோடு, ஈரான் அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். மக்களை கொன்றால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நேரடியாக எச்சரித்தார். அதோடு நிற்காமல், உலகிலேயே சக்திவாய்ந்ததாக கருதப்படும் அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலையும், ஈரான் எல்லையை நோக்கி அனுப்பி வைத்தார்.
தற்போது, அந்த போர்க்கப்பல் மற்றும் அதனுடன் வந்த மற்ற போர்க்கப்பல்களும், ஈரான் எல்லையை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்
இப்படிப்பட்ட சூழலில், தங்கள் நாட்டை நெருங்கிவிட்ட அமெரிக்க போர்க்கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் ஈரான் திணறி வருவதாக கூறப்படுகிறது. நவீன ட்ரோன்கள், செயற்கைக்கோள் உதவியுடன் கூட, போர்க்கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
அதற்கு காரணம், அமெரிக்கா தற்போது அந்த போர்க்கப்பலில் உள்ள டிரான்பாண்டரை அணைத்து வைத்துள்ளதுதான் என சொல்லப்படுகிறது. அதாவது, ஆட்டோமேட்டிக் ஐடென்டிபிகேஷன் சிஸ்டம்ஸ் (Automatic Identification System -AIS) அணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, போர்க்களின்போது தாக்குதலில் ஈடுபடும் போர்க்கப்பல்கள், தங்களை எதிரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும். இந்த ஏஐஎஸ் சிஸ்டம் ON-ல் இருந்தால் மட்டுமே போர்க்கப்பல்களின் இருப்பிடம் மற்றம் நகர்வுகளை கண்டுபிடிக்க முடியும். இதனை ஆஃப் செய்துவிட்டால் எதிரிகளால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தற்போது, அதேபோலத் தான் ஈரானும் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டல் விடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இதனிடையே, செங்கடலில் ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக சூசகமாக நேற்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஈரானின் துணை ராணுவ புரட்சிகர காவல்படையின் ஆதரவு பெற்ற ஈராக்கின் ஹெஸ்பொல்லா துணை ராணுவக் குழுவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானை குறிவைத்து நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் நேரடியாக பதிலடி கொடுக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மத்திய கிழக்கில் தற்போது உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர்க்கப்பல்கள் ஈரானை நெருங்கிவிட்ட நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















