பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை, அவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தென் கொரியா உடனான ராணுவப் பயிற்சிகளை குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சியோலுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு, பென்டகனுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தென் கொரியா நிராகரித்துள்ளது.
ட்ரம்ப் இந்தத் தகவலை சமூக ஊடகப் பதிவு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அதில், "வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் எனக்கு மிகவும் நல்லுறவு உள்ளது. அதனால்தான், தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்த அமெரிக்கா வெகு காலத்திற்கு முன்பே ஒப்புக்கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ராணுவப் பயிற்சி மிகவும் செலவு மிக்கது மட்டுமல்ல, வழக்கம் போல் இதன் பெரும்பாலான செலவுகளை அமெரிக்காவே ஏற்கிறது. அதுமட்டுமின்றி, இது முற்றிலும் தவறான மற்றும் புண்படுத்தக்கூடிய ஒரு செய்தியையும் அனுப்புகிறது. டொனால்ட் ஜே. ட்ரம்ப் அதிபரானதிலிருந்து மிகவும் அமைதியாகவும் மரியாதையுடனும் இருந்து வரும் ஒரு நாட்டிற்கு (வட கொரியா) இந்தச் செய்தி நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ராணுவப் பயிற்சிகள் குறைக்கப்பட வேண்டும்“
மேலும், "இந்தப் பயிற்சிகளை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்ட போதிலும், இந்த கூட்டு ராணுவப் பயிற்சிகளின் வீச்சை கணிசமாகக் குறைக்குமாறு போர்த்துறை செயலர் பீட் ஹெக்ஸெத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்! இது சற்று வேறுபட்ட ஒரு விஷயம். ஆனால், ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் எங்கள் பிரசாரத்திற்கு ஆதரவளிப்பீர்களா என்று நான் சமீபத்தில் தென் கொரிய அதிபரிடம் கேட்டேன், அதற்கு அவர், 'வேண்டாம், நன்றி!' என்று கூறினார். உங்கள் கவனத்திற்கு நன்றி." என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் - மகிழ்ச்சி தெரிவித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், "சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், சமீபத்தில் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து வரும் விதமும், இனி அவை தங்களை இன்னும் சிறப்பாக பாதுகாத்துக் கொள்ளப் போகும் விதமும் பாராட்டத்தக்கது. இந்த மூன்று நாடுகளின் சிறந்த தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய, துணிச்சலான மற்றும் மிகவும் முக்கியமான முதல் படி—ஆஹா!" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, வட கொரியா, கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் நாடுகள் மீது, அதாவது, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி பயமுறுத்தியது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் தான், ட்ரம்ப் தற்போது தென் கொரியா உடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கலாம் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















