![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dalai Lama: "இந்தியாவில் இறக்க விரும்புகிறேன்...." : சீனாவை கடுமையாக சாடிய தலாய் லாமா!
"இறப்பின்போது, உண்மையான உணர்வுகளைக் காண்பிக்கும் நம்பகமான நண்பர்களால் ஒருவர் சூழப்பட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
![Dalai Lama: I like to die in India If I die surrounded by Chinese officials Dalai Lama slams Beijing Dalai Lama:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/23/724321e51d183bcc5ee275fadb02f2ff1663913808418109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வியாழன் அன்று சீனாவை கடுமையாக சாடினார், "செயற்கையான சீன அதிகாரிகளுக்கு மத்தியில் இறப்பதை விட இந்தியாவின் சுதந்திர ஜனநாயகத்தில் இறக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
தலாய் லாமா
திபெத்தில் டக்ஸ்டர் என்னும் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் லாமொ தொண்டுப் என்ற இயற்பெயர் கொண்ட தலாய் லாமா. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கி படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவத்தை கழித்திருந்தாலும், வயது ஆக ஆக ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினார். 25வது வயதில் புத்த சமய தத்துவத்தில் முனைவர் பட்டம் வாங்கினார். அதன் பின்னர் 14வது தலாய் லாமாவாக 1950ல் முறைப்படி பொறுப்பேற்றார். தலாய் லாமா என்பது புத்த மதத்திற்கான தலைமை பொறுப்பை வகிப்பவரை விளிக்கும் சொல்லாகும். ஆனால் இவரை தலைமையாக நியமித்ததில் அதிருப்தி கொண்ட சீனா தொடர்ந்து இவரையும், திபெத்தையும் எதிர்த்து வந்தது. அத்துமீறல்கள் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டு தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரோடு, அவரது சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவிலேயே தஞ்சம் அடைந்து விட்டனர். அவர்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பு குறித்து
இந்த நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடியபோது பேசிய தலாய் லாமா, தன் மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவு கூர்ந்து விவரித்தார். அப்போது அடுத்த பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரை நான் உயிரோடு இருப்பேன், அதில் கேள்விக்கு இடமில்லை என்ற அவர் இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன் என்றார்.
இறக்கும்போது நம்பகமானவர் சூழ்ந்திருக்க வேண்டும்
"இறப்பின் போது, உண்மையான உணர்வுகளைக் காண்பிக்கும் நம்பகமான நண்பர்களால் ஒருவர் சூழப்பட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். சீன அதிகாரிகள் தலாய் லாமாவை ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் பிரிவினைவாத நபராக கருதுகின்றனர். தலாய் லாமா பல ஆண்டுகளாக திபெத் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க சீனாவுடன் நடுநிலைப் பேச்சுவார்த்தைக்கு வாதிட முயன்று வருகிறார்.
நான் இந்தியாவில்தான் இறப்பேன்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் உள்ள அவரது இல்லத்தில் இளைஞர் தலைவர்களுடன் இரண்டு நாள் உரையாடலில் ஆன்மீகத் தலைவர் உரையாற்றினார். யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் (யுஎஸ்ஐபி) ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் உரையாடலை நடத்திய தலாய் லாமா, “நான் இறக்கும் நேரத்தில், நான் இந்தியாவில் இறப்பதையே விரும்புகிறேன். செயற்கையான விஷயங்களை அல்ல, அன்பைக் காட்டுபவர்களால் இந்தியா சூழப்பட்டுள்ளது. நான் சீன அதிகாரிகளால் சூழப்பட்டு இறந்தால்... அது மிகவும் செயற்கையாக இருக்கும். சுதந்திர ஜனநாயகத்துடன் இந்த நாட்டில் இறப்பதையே நான் விரும்புகிறேன்", என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)