Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு வழக்குகளில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட 3 வழக்குகளில், 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது இந்த தண்டனையும் சேர்ந்துள்ளது. ஒருவேளை அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினாலும், இனி வாழ்நாள் முழுவதும் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில், அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாகவும் ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்டு, 3 தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதால் விசாரணைக்கு ஆஜராகாத நியில், இந்த வழக்குகளை தாமாகவே விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும், அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை என, மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அதோடு, இதே வழக்கில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவர் போராட்ட விவகாரத்தில் ஏற்கனவே மரண தண்டனை
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்து, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்த நிலையில், அவர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது என்று சொல்வது போல், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருவேளை அவர் ஏதோனும் ஒரு வழியில் மரண தண்டனையிலிருந்து தப்பினாலும், மீதமுள்ள தனது வாழ்நாளை சிறையில் தான் கழிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.





















